Thursday, February 19, 2009

Gross Domestic Politics

-நாராயணன்

சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.

இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?

மறுவெளியீடு செய்யப்பட்ட பதிவு

No comments: