Thursday, February 26, 2009

திருமாவளவன் நெத்தியடி நிபந்தனை! - ஆனந்த விகடன்

நன்றி: விகடன் - மை.பா. நாராயணன் (பெப்ரவரி 05, 2006)

‘‘வேறு எந்தத் தலைவர்களையும்விட, தலித் அரசியல் களத்திலே நிற்கிற ஒருவன் சந்திக்கிற தடைகளும் துயர்களும் மிக அதிகம். மற்றவர்களால் அடுத்த ஒரு வருடத்துக்கான செயல்திட்டத்தைக்கூட போட்டுவைத்துச் செயல்பட முடியும். என்னைப் போன்றவனுக்கு நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாமல்தான் ஒவ்வொரு இரவும் கடக்கிறது.

இதோ, எங்கள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். எல்லோர்க்கும் இனியன்; இனமானப் போராளி; திருமணமான ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. இனியனின் சடலத்துக்கு அருகில் அந்தப் பிஞ்சுக் குழந்தையோடு அவன் மனைவி கதறிய கதறலைக் கேட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால், இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை. கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித், ஒடுக்கப்பட்டவன்! இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை!’’

குடவாசலில் இயக்கத் தோழர் இனியன் படுகொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய நிலையில், நம்மிடம் வெடித்தார் தொல். திருமாவளவன்.

எட்டிவிடும் தூரத்தில் தேர்தல். அடிக்கடி மாறும் அரசியல் வானிலையில் திருமாவளவனின் நிலை என்ன? டாக்டர் ராமதாஸின் கைப் பிடித்து அறிவாலயத்துக்கு போவாரா? அல்லது அ.தி.மு.க. கூடாரத்தில் செட்டிலாவாரா? இது இப்போதைய பரபரப்புக் கேள்வி. கனல் தெறிக்கும் காட்டம், வழக்கமான சீற்றம் கலந்து நம்முடன் பேசுகிறார் திருமா!
‘‘தேர்தல் வியூகங்கள் தொடங்கி விட்டன. தமிழக அரசியல் களம் எப்படியிருக்கிறது?’’

‘‘சுருக்கமாகச் சொல்வதென்றால், தக்க வைப்பதற்கும் தகர்க்க நினைப்பதற்கும் நடுவில் நடக்கிற ஆடு புலி ஆட்டம்தான் வருகின்ற சட்டசபைத் தேர்தல். எப்பாடுபட்டாவது கூட்டணியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்சித் தலைமை. என்ன செய்தாவது அந்தக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று இன்னொரு கட்சித் தலைமை. இருவருக்கும் இடையே பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் பனி விலகிவிடும். யாரோடு யார் போகிறார்கள், யாரிடம் யார் வருகிறார்கள் என எல்லா கணக்குகளும் தெரிந்துவிடும்.’’
"சமீபத்தில் கூடிய விடுதலைச் சிறுத்தைகளின் மையக் குழுவில் மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் தி.மு.க-வையும் திராவிட இயக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்களாமே?"

‘‘உண்மைதான். அது அவர்களின் அடி மனதிலிருந்த ஆதங்கம். ஏனென்றால், நாங்கள் தொடர்ந்து காயப் படுத்தப்பட்டு வரு கிறோம். எங்களுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த கடந்த கால அனுபவங்கள் எல்லாம் எங்கள் மையக் குழு விவாதத்தில் விரிவாக அலசப்பட்டது. என்னவெல்லாம் பேசினார்கள் என்று சொல்கிறேன்...

'மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர், ராம்தாஸ் ஆத்வாலே, பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வான், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கூட்டணி அரசில் பங்கு பெறுகிறார்கள். ஆனால், இங்கே திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் கட்சியில் இருக்கிற தாழ்த்தப் பட்ட மக்களில் ஒருவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, இன்னொருவருக்கு துணை சபாநாயகர் பதவி என்று தந்து, அதோடு மங்களம் பாடிவிடுகிறார்கள்' என்றெல்லாம் தங்களுடைய மனக் குமுறல்களை மையக் குழு கூட்டத்தில் கொட்டினர் தோழர்கள். அவர்களின் பேச்சில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரியும். நாங்கள் காத்திருக்கிறோம்.’’
‘‘வருகிற தேர்தலில் நீங்கள் யார் பக்கம்?’’

"இந்த முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக எங்களைத் தயார் படுத்தி வைத்திருக்கிறோம். எனவே, எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்கள் விரும்புகிறார்கள். ஆம், இந்த முறை எங்களுக்கு 'கேர் ஆஃப்' விலாசம் கூடாது! சிறுத்தைகளுக்குச் சொந்த முகவரியும் உரிய அங்கீகாரமும் தர முன்வருபவர்கள் யாரோ... அவர்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்! இதுதான் எங்கள் தேர்தல் எதிர்பார்ப்பு!’’
‘‘உங்கள் தமிழ் பாதுகாப்பு இயக்கத் தோழரான டாக்டர் ராமதாஸ், தி.மு.க. அணியில் உங்களைச் சேர்த்துவிட வேண்டும் என்பதில் அதிக அக்கறைகாட்டி வருகிறாரே..?’’

அதற்காக தமிழ்க்குடிதாங்கி அய்யாவுக்கு நன்றி. இன மொழி மீட்புக்காக ஒருமித்த உணர்வுள்ள நானும் ஐயா நெடுமாறன், மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போன்றவர்களும் தமிழ் தேசிய தளத்தில் தோளோடு தோள் நிற்கிறோம். ஆனால், கட்சி அரசியல் பற்றி இதுவரை நாங்கள் பேசியது கிடையாது.

என் மீது தமிழ்க்குடிதாங்கி ஐயாவுக்கு இருக்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது கலைஞர்தானே..? அவருடைய மௌனத்தின் பொருள் என்ன என்று எங்கள் இயக்கத் தோழர்களுக்குப் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம். அடுத்ததை கலைஞர்தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை தனிப்பட்ட முறையில் கலைஞரையோ தி.மு.க-வையோ விமர்சித்தது கிடையாது.’’
‘‘விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம், வட மாவட்டங்களில் உங்கள் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் என ஒரு கருத்து எழுந்துள்ளதே..?’’

‘‘ஊடகங்கள் உண்டாக்கிய மாயத்தோற்றம் இது. கோடம்பாக்கத்துக் கவர்ச்சியில் கரைந்துபோகிறவர்கள் அல்ல, விடுதலைச் சிறுத்தைகளின் தம்பிமார்கள். விஜயகாந்த்துக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்... அரசியல் என்பது சினிமா அல்ல. வாக்குகளைக் குறிவைத்து அள்ளிவிடும் வீர வசனங்களை எல்லாம் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள் மக்கள்!

பணம் கொடுத்து ஆட்களை வேனில் அழைத்து வந்து... அவர்களை நோக்கி 'லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்' என்று பேசுகிறார் விஜயகாந்த். எனவே, கூட்டத்தையும் தோற்றத்தையும் வைத்து எதையும் எடை போட்டுவிட முடியாது. அவர் தரும் வாக்குறுதிகள் காற்றிலே கரைந்துவிடுமா அல்லது கரை சேருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!’’
"‘திருமாவளவனின் நடை, உடை, போக்கு மாறிவிட்டது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்தபடி இருக்கிறார். விடுதலைப் புலிகளிடமிருந்து அவருக்கு பணம் வருகிறது’ என்றெல்லாம் விமர்சனம் வருகிறதே?"

"‘எங்கள் வளர்ச்சியில் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள் கூறும் மலிவான குற்றச்சாட்டுக்கள் இவை. தாய் மண்ணை விட்டு பல்வேறு நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன உணர்வுகளைக் கொச்சைப்படுத்திப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது? அவர்கள் என்ன ரிசர்வ் வங்கியா நடத்துகிறார்கள்?

ஈழ மண்ணிலிருந்து வாழ்க்கையைத் தேடி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்கிற ஈழத் தமிழர்கள், அங்கங்கே தமிழ் அமைப்புகளை நிறுவியிருக்கிறார்கள். அவர்கள் நடத்துகிற தமிழ் சார்ந்த நிகழ்சிகளில் கலந்துகொள்ளவே வெளிநாடுகளுக்குப் போய் வருகிறேன். அதற்கான பயணச்சீட்டுகளை மட்டுமே அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்று வருகிறேன். அப்படிப் போகும் போது சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன். பெரிய ஓட்டலில் தங்குவது, இஷ்டத்துக்குச் செலவு செய்வது எனக்குப் பழக்கம் இல்லை. என் எல்லாப் பயணங்களும் உரிமைகளையும் கொள்கைகளையும் பேசுவதற்காகத் தான்!

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கனூர் கிராமத்தில் உள்ள எங்கள் கூரை வீடு சேதமாகிப்போனது. என் தாய் - தந்தை உட்பட, வீட்டில் இருந்த அனைவரும் குளிரில் நடுங்கியபடி நாட்களை நகர்த்தினார்கள். அதை ஊர் அறியும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்க்கையைத் தவமாக நினைத்து வாழ்ந்து வருகிறவன் நான். எனக்கு கண்ணியம்தான் முக்கியமே தவிர, கரன்ஸி நோட்டுக்கள் அல்ல!’’

No comments: