Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

Tuesday, May 12, 2009

ஓட்டுப் போட்டால் நாமம் போட முடியாது!

இப்படி ஒரு பதிவை நான் எழுதுவதில் விளையும் புகழோ, பழியோ நண்பர் இட்லி வடைக்கு உரியது.
வாக்களிப்பதை வலியுறுத்தி நான் ஒரு பதிவு தேர்தலுக்கு முதல் நாள் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நேற்றிரவு, நண்பர் சந்திரமெளலீஸ்வரன் மின்னஞ்சல் மூலம் ஒரு கட்டுரையை அனுப்பி உங்கள் பதிவில் வெளியிடமுடியுமா? எனக் கேட்டிருந்தார். தேர்தலின் திசைகள் என்ற இந்தப் பதிவைப் வலைப்பதிவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அரங்கமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்தான் துவங்கினேன். (என் எண்ணங்களை எழுதுவதற்குத்தான் ஜன்னலுக்கு வெளியே இருக்கிறதே. யாருக்கு வாக்களிப்பது என்ற தொடர்பதிவைக் கூட அதில்தான் எழுதியிருக்கிறேன்). அதனால் மெளலியின் கட்டுரை வெளியானது.மெளலி நன்றாகவே எழுதியிருக்கிறார். எனவே நான் எழுத வேண்டியதில்லை எனக் கருதியிருந்தேன்.
மெளலியின் கட்டுரை இட்லி வடை பதிவிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஒரு நல்ல செய்தி பல தளங்களின் மூலம் பலரைச் சென்றடைவது நல்லதுதானே!. ஆனால் மெளலியின் கட்டுரையோடு சேர்த்து இட்லி வடை வெளியிட்டிருந்த படம் திகைப்பளித்தது. அது வெறும் குறும்பாக இருக்கலாம். ஆனால் மெளலி வலியுறுத்தும் தவறாமல் வாக்களியுங்கள் என்ற கருத்தை நிராகரிக்க சொல்வதைப் போல படம் அமைந்திருந்தது. வாக்களிப்பது என்பது நாம் நாமம் போட இடமளிக்கும் என்பது இ.வ.வின் கருத்தாக இருக்குமானால் அதை அவர் ஒரு தனி பதிவாகவோ, பின்னூட்டமாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் வார்த்தை ஏதும் பேசாமல், 'தவறாமல் வாக்களியுங்கள்'', என்ற கருத்தை எள்ளுவதில் கெட்டிக்காரத்தனம் இருக்கலாம். ஆனால் நியாயமில்லை.

நாமம் விழுவதைத் தவிர்க்க:
முதலில் இட்லி வடைக்கு ஏன் நாமம் விழுகிறது என்று பார்ப்போம்:

நம்முடைய ஜனநாயகத்தில் வெற்றி பெறுகிற கட்சிகள் வாங்குகிற வாக்குகளைவிட வாக்களிக்காத மக்களின் எண்ணிக்கை அதிகம். உதாரணத்திற்கு 2004 தேர்தல்:
அதில் அதிமுக பெற்ற வாக்குகள் 18.03 சதவீதம். திமுக பெற்ற வாக்குகள் 14.57% காங்கிரஸ் 6,72% பா,ம.க.4.08% மதிமுக 3.54% பா.ஜ.க.3.07% இந்.கம்.1.8% மார்க்.கம்.1.74% சுயேட்சைகளும் மற்றவர்களும் 4.7%

இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை 39.44 சதவீதம். அதாவது அதிமுக, திமுக இந்த இந்த இரண்டும் பெற்ற வாக்குகளை விட (18.03+14.57 =32.60) வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெறாமலே ஒரு கட்சி இங்கு ஆட்சிக்கு வந்து விட முடியும். அவர்கள் பெரும்பாலான மக்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் எப்படி பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்?

மக்கள் அதிக அளவில் வாக்களிக்காத போது இன்னொரு விபரீதமும் ஏற்படுகிறது.

ஐந்து முனைப் போட்டி இருக்கிற ஒரு தொகுதியில் 40 சதவீத வாக்குகள் பதிவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் வேட்பாளர் அ 10 சதவீத வாக்குகள் பெறுகிறார். வேட்பாளர் ஆ பெறுவது 9%. வேட்பாளர் இ பெறுவது 8% ஈ க்கு 6% உ பெறுவது 5 செல்லாத வாக்குகள் 2%. பத்து சதவீத வாக்குகள் வேட்பாளர் அ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அதாவது 90 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் வெற்றியும் பெற்று, கூட்டணி மேஜிக்கில் அமைச்சராகவும் கூட ஆகி விட முடியும்!

இந்தத் தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தால் அவர் 10% ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது.

10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியும் என்ற நிலையிருப்பதால்தான் பலர் தங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். வெற்றி பெற்று வந்த பிறகு அந்த வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அதற்கு பலவித சலுகைகளையும் உதவிகளையும் சட்டத்திற்கு உட்பட்டும் சட்டத்திற்குப் புறம்பாகவும் செய்கிறார்கள். இதை மாற்ற வேண்டுமானால் வாக்குப் பதிவு அதிகரிக்க வேண்டும், அப்படி அதிகரிக்க வேண்டுமானால் ஓட்டுப் போட வேண்டும். அதற்கு பதிலாக நாமம் போடுவதால் போட்டுக் கொள்வதால் நிலைமை மாறிவிடாது

ஒரு தொகுதியில் 80 சதவீத வாக்குகள் பதிவானால் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க ,முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல ஒரு தொகுதியில் பல முனைப் போட்டி இல்லாதிருந்தாலும் 10 சதவீத வாக்கு வாங்கி ஜெயிக்க முடியாது. மேலே உள்ள நம் உதாரணத் தொகுதியில் மும்முனைப் போட்டியென்றால் வெற்றி பெறுபவர் 15 சதவீதமாவது வாங்க வேண்டியிருக்கும். அதே தொகுதியில் ஆறு முனைப் போட்டி என்றால் 10 சதவீத வாக்கு கூட வேண்டியதில்லை.

இதுதான் ஜாதி சங்கங்கள் கட்சிகளாக மாறுவதன் பின் உள்ள சூட்சமம்.
சுருக்கமாகச் சொன்னால் வாக்குப் பதிவு குறைந்தால், போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரித்தால் பெரும்பான்மை மக்களின் விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்காமல் போகும்

கட்சிகள் தோன்றுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் வாக்குப் போட முடியும்.

முதலில் அதைச் செய்யலாம். வாக்குப் போடுவது அதிகரித்தால் நாமம் போடுவது குறையும். அதை விட்டு விட்டு வாக்குப் போடுவதைப் பற்றிக் கேலியும் கிண்டலும் வீசுவதில் எள்ளி நகையாடுவதில் ஏளனம் செய்வதில்,, ஏகடியம் பேசுவதில் எந்த பயனும் கிடையாது.

உழ வேண்டிய நாளில் ஊரைச் சுற்றிவிட்டு, அறுவடை நாளில் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்?

Monday, May 11, 2009

தவறாமல் வாக்களிப்போம்....

தவறாமல் வாக்களிப்போம்....
நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

-சந்திரமெளலீஸ்வரன்

இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் நாட்டில் வாக்குப் பதிவு தினம்
வாக்களிப்பது கடமை. அதை தவறாமல் செய்ய உறுதி பூணுவோம்
இந்தச் செய்தி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என உண்மையாக நினைப்போம். நம்மால் இயன்றவரை இதனை நண்பர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்
நாம் செய்ய வேண்டியது என்ன
மறக்காமல் வாக்குச் சாவடிக்கு சென்று நம் வாக்கை பதிவு செய்வோம். இந்தக் கடமையினை செய்திட நம் உறவினர், நண்பர்களையும் வேண்டுவோம்
வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல கடமையும் ஆகும். ஆகவே வாக்குச் சாவடிக்குச் செல்ல வேட்பாளர்கள் தரும் வாகன்ங்களை புறக்கணித்து நாமே நம் சொந்த முயற்சியில் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்
நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நாம் வாக்களிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சில நிமிட்த்துளிகளே ஆனால் சொற்ப நேரத்தில் எடுக்கும் முடிவு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் வாழ்க்கையினை எப்படியெல்லாம் பாதிக்கும் எனத் தெரிந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்வோம்
ஆண்டு தோறும் இந்த நாட்டில் பல்வேறு நிலைகளில் கல்வி அறிவு பெற்று கல்வி நிலையங்களிலிருந்து புறப்படும் இளைஞர்கள் எத்தனை பேர் தெரியுமா? அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களை நிறைவேற்றி குறைவற்ற வேலை வாய்ப்பினை வழங்கிடும் வண்ணம் நம் வாக்கு ஒரு நிலையான தரமான ஆட்சியினை நமக்கு தர வேண்டாமா?
இந்த பரந்து விரிந்த பாரத்த்திலே இயற்கைச் செல்வங்கள் எத்தனை எத்தனை. அவையெல்லாம் நமக்கு முழு பலன் தரும் வண்ணம் நல்ல செயல் திட்டங்கள் வழங்கிடும் அரசு நமக்கு வேண்டுமல்லவா
நேர்மை என்பதே ஓர் அபூர்வ குணமாகி, நேர்மையாக இருப்பவர் ஒரு சிலரே என்ற துர்பாக்கியமான நிலை தொடர வேண்டுமா ? அரசியல் என்பதே நேர்மை தவறியவர்கள் செயல்படும் தளம் என்பது நம் நாட்டுக்கு ஆரோக்கியமானதா ? இப்படியான நிலையினை மாற்ற வேண்டியது நம் கடமைதானே. அதனை செவ்வனே செய்ய நம் வாக்கு ஒரு கருவி தானே.?
இவையெல்லாம் நாம் வாக்களிக்கும் முன்பு நம் வாக்கை யாருக்கு அளிக்கிறோம் என்பதை முடிவு செய்யும் காரணிகளில் சில.
இதை விடுத்து
கட்சி, ஜாதி, மதம், தேர்தல் நேரத்தில் கிட்டும் சில சலுகைகள் இவையா நம் வாக்கினை முடிவு செய்ய வேண்டும்
நாம் மே 13 அன்று அளிக்கும் வாக்கு வெறும் ஓட்டு அல்ல.. அது நம் வருங்காலத்திற்கு நமக்கு நாமே தரும் வாக்கு.. நம்பிக்கை. வாக்கு என்பது உறுதி மொழி என்ற அர்த்தமும் தரும்
நாம் நம் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தரும் உறுதி மொழி.
தவறாமல் வாக்களிப்போம்.... நம் நிலை தவறாமல் இருக்கவும் வாக்களிப்போம்

இடுக்கண் வருங்கால் நகுக

(தேர்தல் வருங்கால் எனவும் வாசிக்கலாம்)

நேற்றைய சோனியா கூட்டத்திலிருந்து:

சோனியா மேடைக்கு வரும்போது திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தார். உடனே, திருமாவளவன், 'சோனியா அம்மையார் வாழ்க, வாழ்க' என கோஷம் எழுப்பினார்.
*
சோனியா தனது பேச்சை முடிக்கும் முன்பாகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் வரிசையாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். ஆனால், திருமாவளவனின் பெயரை மட்டும் சோனியா குறிப்பிடவில்லை.
இதனால், மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கட்சியினரும் மெüனமாக நின்றனர். இதனால், திருமாவளவன் உற்சாகமிழந்து காணப்பட்டார்.
*
இந்திய அரசைப் பொறுத்தவரை பிரபாகரன் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு

சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்
ஆண்டன் பாலசிங்கத்தின் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கடந்த 3.11.07-ல் இரங்கல் கவிதை எழுதினேன்.ஆனால், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் கவிதை எழுதியதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். முதல்வர் பதவியில் இருந்து விலகவும், ஆட்சியில் இருந்து திமுக வெளியேறவும் கோரினார்

இந்திய அரசில் பங்கேற்றிருந்த திமுகவின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில்

*மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்தான் அங்கு கனரக ஆயுதங்கள் உபயோகிப்பதை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது

நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா

Heavy casualties reported in northern Sri Lanka

இன்று வெளியான இந்து நாளிதழின் செய்தித் தலைப்பு

Sunday, May 10, 2009

உங்கள் வாக்குச் சாவடி எங்கிருக்கிறது?

நீங்கள் உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை உங்கள் வீட்டிலிருந்தே அறிந்து கொண்டு வாக்களிக்கப் புறப்படலாம். அதற்கு ஏதுவாக பத்ரியும் அவரது குழுவினரும் ஒரு வசதியினை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த வசதி சென்னை வாக்காளர்களுக்கு மட்டும்தான். விவரங்கள் கீழே:

நீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:
BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்>என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.

Sunday, May 03, 2009

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?

தினம் ஒரு தேர்தல்-14
தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ?
சென்னை, மே 2: நகரங்களில் டவுன் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது தேர்தல் விதிமுறை மீறிய செயலாக முடிவு செய்யப்பட்டால், மாநிலத்தில் தேர்தலையே ஒத்திவைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு டவுன் பஸ்களில் எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் என்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இவை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) முதல் கைவிடப்பட்டன. சாதாரண பஸ்களில் வாங்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 என்ற அளவில் மட்டும் இப்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் கட்டணம் குறைக்கப்பட்டது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இருந்தாலும், சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கைதான் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, கட்டணம் ஏதும் குறைக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
கட்டணக் குறைப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ் கட்டணக் குறைப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனப் புகார் வந்திருப்பது பற்றி நேரில் விளக்கம் தருவதற்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வருமாறு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
சாதாரண அலுவலருக்கு தண்டனை: சாதாரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் அலுவலர் யாரேனும் தவறு செய்தால் அவரைத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யவோ, இடமாறுதல் செய்யவோ மாநில அரசுக்கு தலைமைத் தேர்தல் ஆணையரகம் பரிந்துரை செய்யும். அதை மாநில அரசு செயல்படுத்தும்.
கீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரி தவறு செய்தால் அவரைத் தண்டிக்கிறது தேர்தல் ஆணையம். இப்போது மாநில அரசே தவறு செய்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒரு தொகுதியில் முறைகேடு ஏதும் நடப்பதாகச் சந்தேகம் வந்தால் அதுகுறித்து தேர்தல் பார்வையாளர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்தான் தேர்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பவர்கள் என ஆணையம் கூறியுள்ளது.
அந்த வகையில் முறைகேடுகள் தங்கள் கவனத்துக்கு வந்தால், தேர்தலை ஒத்திவைத்துவிட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அவர் தகவல் தரலாம்.
தங்கள் கண்காணிப்பில் இருக்கும் தொகுதிக்குள் திடீரென பஸ் கட்டணம் குறைந்துள்ளது பற்றி சில தேர்தல் பார்வையாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரகத்துக்குக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
மாநில அளவில் பெரிய விதிமீறல்கள் நடந்ததாகத் தேர்தல் ஆணையம் கருதிய நிகழ்வுகளில் முன்பு பிற மாநிலங்களில் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில்கூட கும்மிடிப்பூண்டி, மதுரை இடைத்தேர்தல்களின் போது அந்தப் பகுதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
1993-ல் தேர்தல் விதிமீறல் புகாரை அடுத்து ராணிப்பேட்டை இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சிறிய அளவில் முறைகேடு என முடிவு செய்யப்பட்டபோது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநில அளவில் விதிமீறல் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யுமானால், மொத்தமாக மாநிலம் முழுக்க தேர்தலை ஒத்திவைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைய பிரச்னையைப் பொருத்தவரை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வராத வகையில் கவனமாகத்தான் தாங்கள் செயல்பட்டிருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஆணை பிறப்பித்து கட்டணம் குறைக்கப்படவில்லை என்பதால் இது விதிமீறலில் வராது என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிய வழித்தடங்கள் துவக்கி இருந்தாலோ, புதிய பஸ்கள் விட்டிருந்தாலோதான் விதிமீறலாகக் கருதப்படும். இது விதிமீறலில் வராது என்கின்றனர்.
மீண்டும் அதே நிலைமை: இப்போதைக்கு கடந்த வாரம் இருந்த அதே நிலைமையை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.
அவ்வாறு கூறினால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தென்ன? இடப்புறப் பெட்டியில் வாக்களியுங்கள்

ஆயிரம் உளியின் ஓசை

திடீர் உண்ணாவிரதம் ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை, மே.2: யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் உடனடியாக முழு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 27-ம் தேதி கருணாநிதி திடீரென சென்னை அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் இருக்கப்போவது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணத்தை விளக்கி சனிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதம்:
"கடந்த காலங்களில் என்னுடன் நேசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொது மேடைகளில் இலங்கைப் பிரச்னையில் என்னைத் தூற்றிப் பேசினர். அது ஓராயிரம் உளி கொண்டு என்னைத் தாக்குவது போலிருந்தது.
13-வயதிலிருந்து தமிழுக்காக அளவிட முடியாத அடக்குமுறைகளைத் தாங்கி இருக்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சியைக் குலைத்தது யார் என்று திருச்சி கூட்டத்தில் திருமாவளவன் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டார்.
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்? மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்? டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்துவர் யார்? உண்ணாவிரதங்களைக் கபட நாடகம் என்றுரைத்தவர் யார்? என்றெல்லாம் கேட்டு, ஒரு சில இடங்களுக்காகத்தான் எதிர் அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்து யாரும் சேரவில்லை என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியவுடன், இலங்கை மீது படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று சபதம் செய்திருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆளுகிற சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா?
இத்தகையோரின் நடவடிக்கைகளுக்கு இடையே தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக்கூட தெரிவிக்கவில்லை.
உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால்தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்குப் அருகிலோதான் இருந்திருப்பேன்' என எழுதியுள்ளார் கருணாநிதி.

நன்றி: தினமணி3.5.2007

Friday, May 01, 2009

தினம் ஒரு தேர்தல் -13

ஓரம் போ! தேர்தல் பஸ் வருது!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் கட்டணத்தை திடீர் எனக் குறைத்துள்ளது. அதாவது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., எம் சர்வீஸ் என எந்த பஸ்ஸில் பயணம் செய்தாலும் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2 மட்டுமே. இதற்கு முன்னர் முறையே ரூ. 5, ரூ.3, ரூ.2.50 என வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடத்துநர்கள்

இந்தக் கட்டணக் குறைப்பால் ஒவ்வொரு முறையும் டிரிப் கலெக்ஷன் ரு. 1000, ரூ. 800, ரூ. 700 என குறைகிறது. இந்த தொகை பணிமனைக்கு பணிமனை வேறுபடும். தோராயமாக நாள் ஒன்றுக்கு மொத்த வசூலில் சென்னை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படும். எங்களுக்கும் இதனால் தினப்படி குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கியை கவர, எங்கள் பையில் கை வைப்பதா? .

மருத்துவர் ராமதாஸ்:

கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறி சாதாரணக் கட்டணத்தைவிட மூன்று நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களை வருத்தி வந்தது திமுக அரசு.

இன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பஸ்களுக்கும் ஒரே வகையான கட்டணம் என்று கட்டணக் குறைப்பைச் சத்தமின்றி செயல்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.

தேர்தலுக்காகக் கட்டணத்தைக் குறைத்திருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு உயர்த்திவிடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியைத் தடுத்து நிறுத்தாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் திமுக அரசைக் தண்டிக்க முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்::

சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது திமுக அரசு. ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக புதன்கிழமை இரவிலிருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் காலத்தில் பஸ் கட்டணத்தைக் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கட்டணத்தை உயர்த்திவிட்டதையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நரேஷ் குப்தா:

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.

நீங்கள்?:
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Thursday, April 30, 2009

தினம் ஒரு தேர்தல்-12

தா.பா.விற்கு முதல்வர் போட முயன்ற தாழ்பாள்!

சென்னை : ''வடசென்னை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாண்டியன், மனு தாக்கலின்போது தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனு ஏற்கப்பட்டது குறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம்,'' என்று முதல்வர் கருணாநிதி ஏப்ரல் 28ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டி விவரம்: தா.பாண்டியன் மனு தாக்கல் செய்ததில் நடைபெற்றுள்ள தவறுகள், மறைத்துள்ள மோசடிகள் பற்றி ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளேன். இதை நான் வெளியிடுவதன் மூலம் அவர் சார்ந்திருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியில் இது போன்ற தவறுகளை அனுமதிக்க மாட்டார்கள். இதை வெளியிட்ட பின் அந்த கட்சியினர் என்ன செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நிலத்தை வாங்கவில்லை என்று பாண்டியன் சொல்வது உண்மையல்ல.
தி.மு.க., சட்ட ஆலோசகர் ஜோதி கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது, சொத்து சம்பந்தப்பட்ட தகவல்கள் முழுவதும் தர வேண்டும். தா. பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவில் பட்டா எண் 744ல் தனக்கு ஐந்து ஏக்கர் நிலமும், அண்ணா நகரில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு உள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளார். இந்த சொத்துகள் குறித்து முழு விவரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
அவர் குறிப்பிட்ட பட்டா எண்ணில் 2.62 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. ஏழு ஏக்கர் நிலம் அவருக்கு சொந்தமாக உள்ளது. ஆனால், ஐந்து ஏக்கர் மட்டுமே மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாண்டியன் ஒரு சொத்து வாங்கியுள்ளார். அதை பிப்ரவரி 2ம் தேதி பதிந்துள்ளார். அதற்கான பத்திரப் பதிவில் இரண்டு இடங்களில் அவரது போட்டோ ஒட்டி 15 இடங்களில் கையெழுத்திட்டுள்ளார். அவர் வாங்கிய சொத்தை மறைத்துள்ளார்.
இதன்படி, அவர் தேர்தலில் நிற்க தகுதியிழந்துள்ளார். அவரது மனு செல்லாது என்பது சட்ட நிலைமை. இதைக் குறிப்பிட்டு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். 'பத்திரப்பதிவில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை. நான் மனுவில் தாக்கல் செய்தது தவிர வேறு சொத்து எனக்கு இல்லை' என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜோதி தெரிவித்தார்.

அதன்பின் முதல்வர் கருணாநிதி கூறுகையில், ''அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் போட்டுள்ள கையெழுத்தும் இந்த கையெழுத்தும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் கமிஷன் மனுவை ஏற்றது தவறு. இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் நரேஷ் குப்தாவின் கண்டிப்பு என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுகிறது. ஊழல் அடிப்படையில் இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையும் மீறி போட்டியில் இருந்து தா.பாண்டியன் விலகவில்லை என்றால் மக்கள் தீர்ப்புக்கு விடுகிறேம்,'' என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், ''திருவள்ளூர் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் சென்னையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அதற்கு சொத்துவரி செலுத்தவில்லை. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டதற்கான கணக்கு கொடுக்கவில்லை. இதற்காக ஆறு ஆண்டு நிற்க கூடாது என சட்டம் உள்ளது. இதை பரிசீலிக்காமல் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

தினமலர் 29.4.2009

தோல்வி பயத்தால் தா.பாண்டியன் மீது கருணாநிதி தவறான புகார் : இந்திய கம்யூனிஸ்ட்

சென்னை, ஏப். 29: தேர்தலில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவே தா. பாண்டியன் மீது தவறான புகாரை முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது சொத்து குறித்த முழுமையான விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்காமல் மோசடி செய்துள்ளார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீது கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், உத்தப்ப நாயக்கனூர் கிராமத்தில் தா. பாண்டியனுக்கு 2.72 ஹெக்டேர் நிலம் உள்ளது. தி.மு.க.வினர் குறிப்பிடும் கடந்த 11.2.2008 அன்று வாங்கிய சொத்தும் அதில் அடங்கும். இந்த மொத்த சொத்தும் பட்டா புத்தகம் எண் 744-ல் உள்ளது.
வேட்பு மனுவில் தனது கிராமத்தில் பட்டா எண் 744-ல் தனக்குள்ள சொத்து விவரங்களை தா. பாண்டியன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிதாக வாங்கிய சொத்தும், அவரது சகோதரி, சகோதரர் குடும்பங்களிடமிருந்து வாங்கிய பரம்பரை சொத்தே ஆகும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. அவரது குற்றச்சாட்டை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத மாற்று அணியை உருவாக்கும்படி இடதுசாரி கட்சிகள் அகில இந்திய அளவில் அறைகூவல் விடுத்தன. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வுடன் தொடர்ந்து தோழமையை தொடர இயலாத நிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டது. இது பற்றி கருணாநிதியிடமே நாங்கள் விளக்கியிருக்கிறோம்.
கட்சியின் அகில இந்திய தலைமையின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. அணிக்கு மாற்றாக அ.தி.மு.க. தலைமையிலான அணியை உருவாக்குவதில் தா. பாண்டியன் முக்கியப் பங்காற்றினர். அந்த அணி, மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே காழ்ப்புணர்ச்சி, தோல்வி பயத்தின் காரணமாகவே தா. பாண்டியன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கருணாநிதி கூறியுள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
தினமணி 30.4.2009

இப்போது எதுவும் முடியாது : நரேஷ் குப்தா

"வட சென்னை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியன் வேட்புமனு குறித்து, முதல்வர் கருணாநிதி தெரிவித்த புகார் மீது இப்போது எதுவும் செய்ய முடியாது'' என்றார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.

"தா.பாண்டியன் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து குறித்த விவரத்தை முழுமையாக குறிப்பிடவில்லை' என்று புகார் தெரிவித்திருந்தார், முதல்வர் கருணாநிதி. இதற்கு செய்தியாளர்களிடம் நரேஷ் குப்தா, புதன்கிழமை அளித்த பதில்:

"என்னென்ன காரணங்களுக்காக வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் மனுதாக்கலுக்கு முன்பே அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வேட்பாளர்களின் கல்வி, சொத்து பற்றிய தகவல்களில் ஏதாவது குறைகள் இருப்பின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.
வட சென்னையைப் பொறுத்தவரை அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மைதிலி ராஜேந்திரன், நேர்மையான அதிகாரி. வேட்புமனு பரிசீலினையின் போது அவருடன், மத்திய தேர்தல் பார்வையாளர் உடனிருந்தார். எனவே, தவறு நடந்ததற்கான கேள்வி எழவில்லை. இதன்பிறகும், தவறு நடந்திருப்பதாக கூறினால், அதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். தேர்தலுக்குப் பிறகு வழக்குப் போடலாம். இப்போது எதுவும் செய்ய முடியாது.

சொத்து, கல்வி பற்றிய விவரங்களை வெளியிடுவது வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். "வேட்பாளர்கள் தங்களைப் பற்றித் தரும் தகவல்களை வைத்து, அவர்களது வேட்புமனுக்களை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய தேர்தல் ஆணையச் செயலாளர் கே.எப்.வில்பர்ட் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர்... திருவள்ளூர் அதிமுக வேட்பாளர், தனது முந்தைய தேர்தல் கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை என்று திமுக புகார் கூறியுள்ளது.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தேர்தல் ஆணைய விதி. அதன் படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தற்போது நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுவுக்கு முன்பே வெளியிடப்படும். அதில், திருவள்ளூர் வேட்பாளர் பெயர் இடம்பெறவில்லை.
தினமணி 30.4.2009
Candidate can’t be disqualified for suppressing asset details: EC

Chennai: Chief minister and DMK president M Karunanidhi’s demand that CPI state secretary and Chennai North candidate D Pandian be disqualified for “willfully suppressing” information about his assets has raised a pertinent question as to whether a returning officer or even the Election Commission has the power to disqualify a candidate for furnishing false details about assets.
Chief electoral officer Naresh Gupta, drawing attention to the EC’s handbook for returning officers, said the nomination could not be rejected on the grounds that information provided by the candidate in the affidavit was false. As per the EC directive, the returning officer (RO) should only display for public view the objections on the notice board so as to help them make their choice on election day.
Scrutiny of nomination is a quasi-judicial duty bestowed on the returning officers by the EC. The officers discharge this duty with complete judicial detachment and in accordance with the highest judicial standards, Gupta said. “The returning officers must not allow any personal or political predilections to come in the way of their duty. In the case of Chennai North, the returning officer (Chennai collector Mythili Rajendran) is an honest officer,’’ Gupta said, stressing the fact that the election observer was also present at the time of scrutiny.
On June 28, 2002, the EC had issued an order directing poll officials to reject nominations of those candidates furnishing false details and suppressing facts. It also said penal action would be initiated against such candidates under the Indian Penal Code. However, the EC withdrew the order on March 27, 2003, following a Supreme Court ruling (March 13, 2003) in a case between Peoples Union for Civil Liberties (PUCL) and the Union government.
Nevertheless, the Election Commission took up the issue with the Prime Minister while recommending electoral reforms in 2004. In a letter written to Manmohan Singh on July 30, 2004, the then CEC TS Krishnamurthy pointed out that in the previous elections “there have been cases where the candidates are alleged to have given grossly undervalued information, mainly about their assets.”
Though Section 125A of the Representation of the People Act provides for punishment of imprisonment for a term up to six months or fine or both for furnishing wrong information or concealing any information, the commission suggested that to protect the right to information of the electors in accordance with the spirit of the SC judgment in the PUCL case, the punishment be made more stringent – “imprisonment for a minimum term of two years and doing away with the alternative clause for fine.” Conviction for offences under Section 125A should further be made part of Section 8(1) (i) of the Representation of the People Act, 1951, the CEC argued and pointed out that only then could a candidate be disqualified for such an offence.
But nothing much has happened with regard to amending the RPA to disqualify candidates who provide false information in their affidavits, Krishnamurthy told TOI. He said, “The Supreme Court’s view was that a returning officer is too junior an officer to decide disqualification of a candidate on grounds of providing false details in the affidavit.
As of now, the only option available is to file a case against the candidate in a court of law.” About the government’s apathy, he added, “The Election Commission had also forwarded the assets details of candidates close on the heels of 2004 elections to the powersthat-be for doing a proper verification by the income tax department. But we did not get any response.”

Times of India 30.4.2009

உங்கள் கருத்தென்ன இடப்பக்கமுள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

திருமாவின் ஜால்ரா!

"இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.இனி செய்வதற்கு எதுவுமில்லை" என ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 62% பேர் அவரது பேச்சு இரண்டு சீட்டுக்காகப் போடும் ஜால்ரா எனக் கருதுகிறார்கள்.

20% பேர் அவரது பேச்சு யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கிறதாகக் கருதுகிறார்கள்.

17 சதவீதம் பேர் இலங்கைப் பிரசினையில் இனி திமுக எதுவும் செய்யாது என்பதை அவர் பேச்சு உணர்த்துவதாகக் கருதுகிறார்கள்.

Tuesday, April 28, 2009

காங்கிரசில் இளைஞர்கள் இல்லை!

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்காததற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை முன்வைத்து தினம் ஒரு தேர்தல்-2 நடத்தப்பட்டது.

இருந்தால்தானே கொடுக்க முடியும் என்ற கருத்த்தை வாக்களித்தவர்களில் 55% ஆதரிக்கிறார்கள். இன்னொரு 34% பேர் எதிர்பார்த்ததுதான் என கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது சுமார் 89% சதவீதம் பேர் காங்கிரசில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பில்லை எனக் கருதுகிறார்கள் (ராகுல் ஒரு விதிவிலக்கு?)

தினம் ஒரு தேர்தல் 11

கருணாநிதியின் உண்ணாவிரதம் - உங்கள் கருத்தென்ன?

சென்னை, ஏப். 27: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை காலை திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். எனினும் போரை நிறுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறி மதியத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சென்னையில் அண்ணா அறிவாலயம் செல்ல வேண்டும் எனக் கூறி, திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்குச் சென்று காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும் என்ற நம்பிக்கை நேற்று வரை இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்த பிறகும், அதை ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறிவிட்டது.

இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கண்விழித்திருந்து, எதிர்பார்த்திருந்தேன். ஆனால் போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள, இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.

உண்ணாவிரதம் முடிந்தது: இந்நிலையில், கருணாநிதி மதியம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக திங்கள்கிழமை இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என அதில் முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதியம் சுமார் 12.30 மணி அளவில் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
(தினமணி 28.4.09)
ஆனால்--

Civilians in the so-called safety zone were relieved for a while as the annoncement by Colombo reached them through radio news broadcast Monday noon. But, their expectation was short lived as SLAF bombers flew over the safety zone carrying out air attacks hitting the southern part of the zone 4 times around 12:40 p.m., 2 times around 1:10 p.m. and 3 times around 3:45 p.m.

Tamilnet
அங்கே-
அரசு சார்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரித்துக் கூறப்பட்டவை. உண்மைக்கு மாறானவை என்று ராஜபட்ச கூறியுள்ளார்.

ராணுவம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் மூச்சுக் காற்று கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் போர் நிறுத்தம் செய்து அவர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மாட்டோம் என்று இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பு அதிகாரி லட்சுமண் ஹுலகுலே தெரிவித்தார்.


தினமணி 28.4.09

திமுக கருணாநிதியின் உண்ணாவிரதம் வெற்றி வெற்றி எனக் குதூகலிக்கிறது. இது கபட நாடகம் என அதிமுக அணி சொல்கிறது. ஊடகங்கள் மெளனம் காக்கின்றன. உங்கள் கருத்தென்ன? அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Monday, April 27, 2009

தினம் ஒரு தேர்தல் -10

காலணிக் கலாசாரம்?

அன்று ஜார்ஜ் புஷ், அதன்பின் சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால், நடிகர் ஜிதேந்திரா,நேற்று பிரதமர் மன்மோகன் சிங். மேடையில் இருக்கும் பிரபலங்களை நோக்கிக் காலணிகளைக் கழற்றி வீசுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
என்ன காரணம்?
ஜார்ஜ் புஷ் மீது நடந்த தாக்குதலைத் தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் காண்பித்து இத்தகைய எதிர்ப்பு முறைக்கு புகழ் சேர்த்து (has glorified the incident) அதைப் பிரபலமாக்கிவிட்டன என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜனநாயக ரீதியான எதிர்ப்பு முறைகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிப்பதில்லை. கறுப்புக் கொடி, உருவபொம்மை எரிப்பு போன்று தனி ஒருவரால் செய்யக்கூடிய கண்டனங்களை அரசுகள் அனுமதிப்பதில்லை. கொதித்துப் போயிருப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கிறமாதிரி வேறு எப்படித்தான் எதிர்ப்பைக் காட்டுவது? எனக் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். இது விளம்பரம் தேடிக் கொள்ள ஓர் சுலபமான வழி எனச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

அடுத்த பிரதமரைத் தமிழகம் தீர்மானிக்கும்

'தினம் ஒரு தேர்தல்' கருத்துக் கணிப்பில் முதல் கேள்வியாக ஏப்ரல் 17 அன்று அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கும் வாய்ப்பு தமிழகத்திற்கு உண்டா என்ற கேள்வி ஏப்ரல் 17 அன்று பதிவர்கள் முன் வைக்கப்பட்டது. நாற்பது தொகுதிகளையும் எங்களுகே அளித்தால் அடுத்த பிரதமரைத் தமிழ் நாடு தீர்மானிக்கும் என முழங்கி வருவதால் அது குறித்த கருத்துக் கணிப்பாக இந்தக் கேள்வி அமைந்தது.

வாக்களித்தவர்களில் 73 சதவீத பதிவர்கள் வாய்ப்பு உண்டு என்று கருதுகிறார்கள். (நிச்சியம் நடக்கும் என்ப்வர்கள்18% வாய்ப்பு உண்டு என்பவர்கள் 55%) வாய்ப்பே இல்லை எனக் கருதுபவர்கள் 6%. மிகையான கற்பனை எனக் கருதுபவர்கள் 19%

தேர்தல் முடிவுகளுக்குப் பின் மீண்டும் இதை ஆராயலாம்

Sunday, April 26, 2009

தினம் ஒரு தேர்தல் -9

ஜெயலலிதாவின் நிலை மாற்றம்: உங்கள் கருத்தென்ன?

தனி ஈழம் அமைவதுதான் இலங்கைப் பிரசினைக்குத் தீர்வு, மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு அமைந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன் என நேற்று ஈரோட்டில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்க்கிறார்.

அவ்ர் பேச்சிலிருந்து:

"வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த 23ம் தேதி என்னை சந்தித்து ஒரு வீடியோ கேசட் கொடுத்தார். அவர் இலங்கை சென்றிருந்ததாகவும், அங்குள்ள தமிழர்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் கூறினார். அந்த வீடியோ காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். இலங்கைத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து தமிழர்கள் அழிக்கப்படுவதை அதில் பார்த்தேன்.


போர் நிறுத்தம் தேவை என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், அங்குள்ள தமிழர்கள் ராணுவ முகாம்களில் அடிமைகளைப்போல், கைதிகளைப் போல நடத்தப்படுகின்றனர். ஜெர்மனியில் யூதர்களை அழித்த ஹிட்லர் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதுபோன்ற ஆட்சியைத்தான் தற்போது இலங்கையில் ராஜபக்ஷே நடத்தி வருகிறார். வீடுகளை இழந்து, மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் அரசு முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர்.


ஜனநாயக நீதி காண்பது வெறும் கண்துடைப்பது தான். தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசு உள்ளது. தமிழ் இனம் அழிவதற்கு தி.மு.க.,வும், காங்கிரசும் தான் காரணம். தி.மு.க., அரசு வேலை நிறுத்தம் செய்வதும் வெறும் கண்துடைப்பு தான். இந்திய தூதர்கள் அங்கு சென்றதால் என்ன நடந்தது? அவர்கள் செய்தது தான் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் தான் வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும், சம உரிமையும் கிடைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு அமைந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன்."

ஜெயலலிதா தனி ஈழம் என்ற அமைப்பை இதுவரை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதில்லை. இன்று ஏற்பட்டுள்ள மனமாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்?

தேர்தல் என்று எளிதாக ஒரு முடிவுக்கு வந்து விடலாம், ஆனால் தனது மதிப்பிற்குரிய ஒருவர் நேரில் சென்று பார்த்து வந்து சொல்லும் தகவல்கள், இது நாள் வரையில் ஊடகங்கள் வழியே அறிந்து வந்த தகவல்களை விட நம்பிக்கைக்குரியதாக ஏற்கப்பட்டிருக்கலாம். ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கைப் பிரசினையில், உண்மைத் தகவல் எங்கு முடிகிறது, பிரசாரம் எங்கு துவங்குகிறது எனக் கண்டு கொள்வது சிரம்மானதாகத்தானிருந்தது.

எது எப்ப்டியிருந்தாலும் ஜெயலலிதாவின் நிலைப்பாடு நாடெங்கிலும் கவனிக்கப்படும், விவாதிக்கப்படும். அவரது இந்த மாற்றம் குறித்து உங்கள் கருத்தென்ன? அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Friday, April 24, 2009

தினம் ஒரு தேர்தல் -8

சிவகாசி, ஏப். 23: அமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு வசதியை "சன்' டி.வி.க்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியதை மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) கண்டுபிடித்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து சிவகாசியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:

தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.எஸ்.என்.எல். மூலம் 323 தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டன. அவை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டவை. உரையாடல் மட்டுமின்றி, ஒலி, ஒளி காட்சிகளையும், தகவல் தொகுப்புகளையும் உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அதன் மூலம் அனுப்பலாம்.

இந்த இணைப்புகளுக்காக தயாநிதி வீட்டிலேயே ஒரு தொலைபேசி இணைப்பகத்தை பி.எஸ்.என்.எல். அமைத்தது. அமைச்சர் என்ற முறையில், அலுவலகப் பயன்பாட்டுக்காக தரப்பட்ட சிறப்பு இணைப்பு இது.

ஆனால் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு செலவில் இந்த இணைப்பு "சன்' டி.வி. அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாகத் தெரியவருகிறது. அமைச்சர் வீடும், "சன்' டி.வி. அலுவலகமும் ரகசியமாக கேபிள் வழியாக இணைக்கப்பட்டனவாம். அமைச்சருக்கு அரசு கொடுத்த தொலைத்தொடர்பு இணைப்புகளை, அமைச்சர் பயன்படுத்துவது போல் வெளியில் தோற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் ஆனால், இவற்றைப் பயன்படுத்தியது சன் டி.வி.தான் என்றும் சி.பி.ஐ. கண்டுபிடித்ததாம்.

தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து மட்டும் 2007 மார்ச் மாதத்தில் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 தொலைபேசி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. "சன்' டி.வி.யில் இருந்து திரைப்படங்கள், பாடல்கள், தொடர்கள் போன்ற ஒலி, ஒளி காட்சிகள் உலகின் பல இடங்களுக்கும் அரசு தொலைபேசியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன என்ற உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இதற்கான ஆதாரங்களோடு கூடிய தகவல்களை சுற்றுப் பயணத்தில் ஒருவர் என்னிடம் கொடுத்துள்ளார்.

அரசு வசதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் தயாநிதி மாறனும், அவர் சம்பந்தப்பட்ட சன் டி.வி. நிறுவனமும், பெருமளவில் லாபம் அடைந்திருப்பதையும், நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டிய வருமானம் கொள்ளை போயிருப்பதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது என்று அதிலிருந்து தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் சண்டையிட்டுக் கொண்டபோது, இது தொடர்புடைய எல்லா உண்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 2007 செப்டம்பர் மாதமே இந்த முறைகேடு குறித்த அனைத்து விவரங்களையும் சி.பி.ஐ. திரட்டி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.

தயாநிதி மாறன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கோப்புகள் தயாராகி, திமுக மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பார்வைக்கும் சென்றிருக்கிறது. இந்தத் தகவல் பிரதமரின் பார்வைக்கும் வந்திருக்கும். மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அவர்கள், கூட்டணிக் கட்சியான திமுகவின் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சராசரி இந்திய குடிமகனுக்கு சாதாரண தொலைபேசியே எட்டாத தூரத்தில் இருக்கும்போது, அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன் தன் வீட்டில் தொலைபேசி இணைப்பகமே அமைத்துக் கொண்டார். அதை முறைகேடாக சன் டி.வி. பயன்படுத்தி பல கோடி ரூபாய் பயன்பெற்றுள்ளது.

கருணாநிதியின் குடும்பம் இணைந்துவிட்ட பிறகு, எல்லா ஊழல்களும் மூடி மறைக்கப்பட்டுவிட்டன.

நன்றி: தினமணி 24.4.2009

இன்று (26.4.2009) தினமணியில் வெளியாகியுள்ள இதற்குத் தொடர்பான இரு செய்திகள்:


ஜெயலலிதாவுக்கு தயாநிதி நோட்டீஸ்

சென்னை, ஏப். 25: தன் மீது அவதூறாக குற்றஞ்சாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று கோரி மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிநவீன வசதிகள் கொண்ட தொலைபேசி இணைப்புகள் செயல்படக் கூடிய இணைப்பகம் ஒன்றை தயாநிதி மாறனின் வீட்டில் பி.எஸ்.என்.எல். அமைத்துக் கொடுத்ததாகவும், அதை அவருக்கு தொடர்புடைய "சன்' டி.வி. தவறாகப் பயன்படுத்தியதாகவும் தமக்குத் தகவல் வந்திருப்பதாக ஜெயலலிதா கூறியிருந்தார்.

சிவகாசியில் வியாழக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் இதை ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்தப் புகார் ஆதாரம் அற்றது என்றும் இதனால் தமக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் தயாநிதி மாறன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறியிருப்பதாக தயாநிதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளவாறு எதுவுமே நடக்கவில்லை என்று தெரிந்திருந்தும் அவ்வாறு குற்றம் சாட்டியிருப்பதாகவும், தேர்தல் பிரசாரத்துக்காக அவ்வாறு கூறியிருப்பதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு செயற்கைக்கோள் மூலம்தான் செய்யப்படுமே தவிர, ஜெயலலிதா கூறியதைப் போல தொலைபேசி இணைப்பு மூலம் செய்யப்படுவதில்லை என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

தயாநிதி மீது மத்திய புலனாய்வுக் குழு விசாரணை நடப்பதாக கூறியிருப்பதும் தவறானது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும், ரூ.10 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
___

6 மாதங்களாக விடை தெரியாத கேள்வி:ஆ. ராசா கேள்வி -தயாநிதி மெளனம்

சென்னை, ஏப். 25: செல்போன் பயன்பாட்டுக்கான அலைக்கற்றை பதுக்கல் தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா 6 மாதங்களுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு அத் துறையின் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இரண்டாம் தலைமுறை செல்போன் சேவையில் கூடுதலாக 6 நிறுவனங்களுக்கு "முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அனுமதி வழங்கியதால் மத்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கடந்த அக்டோபரில் செய்திகள் வெளியாயின.

அதைத் தொடர்ந்து சென்னையில் மத்திய பத்திரிகை தகவல் மைய வளாகத்தில் அக்டோபர் 10-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆ. ராசா.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார். தனக்கும், தான் சார்ந்துள்ள திமுகவுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஏற்கெனவே இத் துறைக்குப் பொறுப்பு வகித்த அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன்தான் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்புவதாக அப்போது ராசா குற்றஞ்சாட்டினார்.

முதல்வர் கருணாநிதி குடும்பமும், தயாநிதி மாறன் குடும்பமும் அப்போது பிரிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

""நான் பதவி ஏற்பதற்கு முன்பு வரை செல்போன் அலைவரிசை கிடையாது என்று சொல்லி வந்தார்கள். நான் பதவி ஏற்ற பிறகு ஆய்வு செய்ததில் 30 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு செல்போன் அலைவரிசை பயன்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டுபிடித்தேன். அதைக் கொண்டு 6 புதிய செல்போன் நிறுவனங்களைத் தொடங்க முடியும். அதனால் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கும். அவ்வாறு அதைப் பயன்படுத்தாமல், தெரிந்தோ, தெரியாமலோ மறைத்தவர்களைப் பற்றி யாரும் கேட்கவில்லை'' என்றும் செய்தியாளர் கூட்டத்தில் ராசா கூறினார்.

ராசாவுக்கு முன்பு அப் பதவியை வகித்தவர் தயாநிதி மாறன். எனவே அலைக்கற்றை பதுக்கல் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அத் துறையினர் கூறுகின்றனர்.

புதிய நிறுவனங்களுக்கு அனுமதி தந்தால் ஏற்கெனவே செல்போன் சேவை அளித்து வரும் நிறுவனங்கள், கூடுதல் போட்டியை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால், "ஏதோ ஒரு காரணத்துக்காக' இவ்வாறு அலைக்கற்றை பதுக்கப்பட்டது என்பது அவருடைய துறையின் வாதம்.

அலைக்கற்றை பதுக்கலுக்காக தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று ராசா கூறிவிட்டார்.

ராசாவின் இந்தக் குற்றச்சாட்டு பற்றி தயாநிதியின் பதிலைப் பெற அடுத்த 2 தினங்கள் செய்தியாளர்கள் முயன்றும் பதில் கிடைக்கவில்லை.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, அல்லது தாம் அமைச்சராக இருந்த காலத்தில் தவறு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தயாநிதி இதுவரையில் விளக்கம் அளிக்கவில்லை.

அமைச்சர் என்ற முறையில் நவீன தொலைபேசி இணைப்பக வசதியை சன் டி.வி. தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியதற்காக ஜெயலலிதாவுக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாநிதி மாறன்.

இருந்தபோதிலும், ராசாவின் குற்றச்சாட்டுக்கு இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியானால், ராசாவின் தகவலில் உண்மை ஏதும் இருக்குமோ என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும் என்பதை திமுகவினரே ஒப்புக்கொள்கின்றனர்.

இப்போது கருணாநிதியின் குடும்பமும், தயாநிதியின் குடும்பமும் ஒன்றுசேர்ந்துவிட்ட நிலையில், இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் உள்ளது.

இருந்தபோதிலும், அலைக்கற்றை பதுக்கியவர் மீது என்ன நடவடிக்கை என்று இப்போதைய அமைச்சரும், பதுக்கலுக்கு தான் காரணமா என்பது பற்றி முன்னாள் அமைச்சரும் தேர்தல் நேரத்திலாவது விளக்கம் தர முன்வர வேண்டும் என தமிழக வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர் என அரசியல் நடுநிலையாளர்கள் கோருகின்றனர்.

இந்தச் செய்தியுடன் அசை போட சில பின்னணித் தகவல்கள்:

  • தயாநிதி மாறன் பதவி விலகியது மே 13 2007
  • கருணாநிதி குடும்பம் மீண்டும் ஒருங்கிணைந்தது டிசம்பர் 1 2008
  • விலகியிருந்த நாட்களில் சன் குழுமம ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டது
  • தயாநிதியின் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையின் கோப்பு ராசாவிடம் அனுப்பப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார்.
  • குடும்ப இணைப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுமோ?

இந்த ஊழல் புகார் குறித்த உங்கள் வாக்குகளை இடப்புறம் உள்ள பெட்டியில் பதிவு செய்யலாம்



Thursday, April 23, 2009

தினம் ஒரு தேர்தல்-7

"இலங்கையில் தமிழ் மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் நம் தமிழ் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனிதாபிமான உணர்வு கொண்ட பல அமைப்புகளும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிடக் கூடிய இடத்திலும், நிலையிலும் இந்திய அரசு உள்ளது. ஆனால் இந்தியா இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

"போர் நிறுத்தம் செய்யுங்கள்' என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட "வேலை நிறுத்தம் செய்யுங்கள்' என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், தந்தி கொடுப்பது, பிரதமருடன் சந்திப்பு, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற கருணாநிதியின் நடவடிக்கைகளால் ஒரு தமிழ் உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை.

காலம் தாழ்த்துவதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை கருணாநிதி மேற்கொள்கிறார். இதனால் இன்று இலங்கைத் தமிழர் நிலை மிகவும் பரிதாபகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இந்த நேரத்தில் கூட கருணாநிதி மத்திய அரசை நிர்பந்தித்து, போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை. வேறு எப்போதுதான் செய்யப் போகிறார்?

-ஜெயலலிதா

கருணாநிதி இன்றே செயல்பட வேண்டும். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்துக் கொண்டு தில்லிக்கு செல்ல வேண்டும். "போரை நிறுத்துங்கள்' என்று சோனியாவிடம் நேரில் எச்சரிக்கை விடுத்து, அதில் வெற்றி பெற்று திரும்ப வேண்டும்.

அது ஒன்றுதான் ஈழத் தமிழர்களைக் காக்கும். வேலைநிறுத்தம் தமிழர்களை பாதுகாக்காது
-மருத்துவர் ராமதாஸ்

கருணாநிதியோ பதவி விலகுவதால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இதுவரைதான் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார். இறுதியில் மத்திய அரசிடம் முறையிட்டும் பயனில்லை, அழுது புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

கருணாநிதிக்கு அண்ணா சொன்ன வழி மறந்து போய்விட்டதா? "என்னால் முடிந்தவரை மக்களுக்காகப் பாடுபடுவேன். முடியவில்லையென்றால் அதற்கான காரணங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி விட்டு மறு வினாடியே முதல்வர் பதவியிலிருந்து விலகிவிடுவேன்' என்றார். அண்ணாவைப் பொருத்தவரை பதவி என்பது தோளின் மேல் போடும் துண்டு. ஆனால் கருணாநிதிக்கு அது இடுப்பு வேட்டி.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு கண்துடைப்பு வேலை. திமுக நடத்தும் இந்த நாடகத்தில் தேமுதிக பங்கேற்காது

- விஜயகாந்த்.

General strike will not affect normal life, says Chief Secretary

CHENNAI: The call for a general strike on April 23 was given by a political party and not by the government, and normal life will be maintained, Chief Secretary K.S.Sripathi said on Wednesday.

Responding to questions from press persons, he said the government would take all efforts to maintain normalcy during the period of the strike and all services would be maintained. Public transport would be operated as usual, he said.

Southern Railway has clarified that trains, including suburban trains, will be operated as usual.

Spokespersons of airlines said that they did not have any instructions and would operate as usual.

The Chief Electoral Officer made it clear that the filing of nominations for the Lok Sabha elections will continue on Thursday despite the strike call

Chief Secretary to Tamilnadu Government

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இங்கு பந்த் அல்லது உண்ணாவிரதம் போன்றவற்றை மேற்கொள்வதால் அங்கு பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது.

பந்த் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம் என்று திருப்தி அடையலாமே தவிர அங்கு பிரச்சினை தீர்ந்துவிடாது.

-வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர்

பந்த் பலன் தருமா? இடப்ப்க்கம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

Wednesday, April 22, 2009

மூட் மீட்ட்ர்-2+தினம் ஒரு தேர்தல்-6

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை எட்டி இருக்கும் இந்த நிலையில் இரு தமிழக தலைவர்களது மனநிலைகள்:

"இலங்கைத் தமிழர்களது துயரங்களுக்கு முடிவு கட்டும் சக்தி இந்திய அரசிடம் இருக்கிறது.அழுவதையும் புலம்புவதையும் தவிர நாம் வேறென்ன செய்து விட முடியும்?"
-மு.கருணாநிதி
முதலமைச்சர் & தலைவர் - திமுக

டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்ரல் 22 2009 பக்-2

" The means to end sorrows of Sri Lankan Tamils is with the Indian Government. What can we do except wail and weep "

-M.Karunanidhi,
Chief Minister & DMK President

Times of India April 22 2009 Page 2

" இந்த கடைசி நிமிடத்திலாவது கருணாநிதி தைரியமாக ஒரு முதல்வரைப் போல செயல்பட வேண்டும்."
ஜெயலலிதா
டைம்ஸ் ஆப் இந்தியா ஏப்ரல் 22 2009 பக்-7


"At least in this late hour Karunanidhi should stand up and act like a chief minister"
Jayalalithaa
Times of India April 22 2009 Page 2

இலங்கைத் தமிழர்களது துயர் இந்த அளவிற்கு முற்றக் காரணம் என்ன? இடப்பக்கப் பெட்டியில் வாக்களியுங்கள்.

Tuesday, April 21, 2009

தினம் ஒரு தேர்தல்-5

வெளிநாடுகளில் குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி கோரினார். என்ன காரணத்தாலோ காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதற்காக அவர் மீது கண்டனக் கணைகளை வீசுகின்றனர்.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்குள் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என்று அத்வானி கூறியிருக்கிறாரே, இதனால் அந்த முதலீட்டாளர்கள் உஷார் அடைந்து பணத்தையெல்லாம் அந்த வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துவிட மாட்டார்களா? 100 நாள்களுக்குள் பணத்தை எடுத்துவிடுங்கள் என்று அவர்களுக்கு சமிக்ஞை தருகிறாரா?' என்றுகூட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: "அத்வானி நியமித்த பணிக்குழுவினர் தங்களுடைய அறிக்கைக்கு ஆதாரங்களாகப் பயன்படுத்தியவற்றில், வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட "குளோபல் ஃபைனான்ஷியல் இன்டக்ரட்டி' (ஜி.எஃப்.ஐ) என்ற அமைப்பு தந்த புள்ளிவிவரம் மட்டுமே நம்பகமானது; மற்றவையெல்லாம் மோசடியானவை.

2002 முதல் 2006 வரை இந்தியாவிலிருந்து வெளியேறிய பணம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்கிறது அந்த அமைப்பு. இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இதில் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிலிருந்து வெளியேறிய பணத்தை மட்டுமே பற்றியது; வெளி நாடுகளிலிருந்தும் ஹவாலா மூலம் இந்தியாவுக்குப் பணம் வருகிறது. அந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் நம்மிடமிருந்து போவதைவிட வருவதுதான் அதிகமாக இருக்கும், அது நம்முடைய மூலதனக் கணக்கில் வரும் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஜி.எஃப்.ஐ. அமைப்பின் தகவலைக்கூட அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது. அது கையாண்டுள்ள கணக்கிடும் முறையிலேயே தவறுகள் உள்ளன. அந்த அறிக்கையைத் தயாரித்த தேவ் கர் என்பவரையே கேட்டேன், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணம் செல்லும் வழி எது என்று.

ஏற்றுமதி மதிப்பைக் குறைத்துக் காட்டியும், இறக்குமதி மதிப்பை செயற்கையாக அதிகப்படுத்திக் காட்டியும் இப்படி பணம் கடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்' என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

சீதாராம் யெச்சூரி: 2002 முதல் 2006 வரையிலான காலத்துக்கு அறிக்கை வெளியாகியிருக்கிறது. 2002 முதல் 2004 வரை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது. இப்படி இந்தியப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க அந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, அத்வானி என்ன செய்துகொண்டிருந்தார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வினவினார்.

மனமாற்றம்: தங்களுடைய வங்கிகளில் பணத்தைப் போடும் வாடிக்கையாளரின் தனி உரிமைதான் முக்கியம், கணக்கு விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கருதுவதால் வாடிக்கையாளர்களுடைய பெயர், முகவரி, போட்ட தொகை ஆகிய அனைத்தையும் ரகசியமாகக் காத்து வந்தன சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகள்.

""முறைகேடாக சம்பாதித்த பணம் கொள்ளைக்குச் சமம். அந்தக் கொள்ளைப் பணத்தைக் கொண்டுவந்து குவிக்க நாமே இடம் தரலாமா?'' என்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நற்சிந்தனையாளர்கள் அரசைக் கேட்டனர். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், குடிநீர் போன்றவற்றுக்கு நிதி ஆதாரம் போதாமல் வறுமை தாண்டவமாடும் நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும், தொழில், வர்த்தக அதிபர்களும், பிற சமூக விரோதிகளும் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வதற்கு இடமும் தந்துவிட்டு அந்தத்தகவல்களைத் தெரிவிக்க மாட்டோம் என்று மறுப்பது எந்த வகையில் தார்மிகமானது என்று சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டதை அடுத்து, அந்தத் தகவல்களைத் தர அரசு கடந்த சில மாதங்களில்தான் தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமணி

இது குறித்து இன்றைய இந்துவின் தலையங்கம்: A major issue on the agenda


வெளிநாட்டிலுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் இங்கு கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன? இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.

Monday, April 20, 2009

தினம் ஒரு தேர்தல் -4

மணிகச்சி (பிகார்), ஏப். 18: பாபர் மசூதி இடிப்பில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் புகார் தெரிவித்தார். பிகாரில் தர்பங்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துவந்தது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர அதைக் தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவில்லை என்றார்.

இந்த விஷயம் தொடர்பாக யாரேனும் தொடர்ந்து பேசமுற்பட்டால் அது சம்பந்தமாக மேலும் சில தகவல்களை பேசவேண்டிவரும் என்றும் லாலு எச்சரித்தார்.

காங்கிரஸ் மறுப்பு: பாபர் மசூதி தொடர்பாக லாலு தெரிவித்த கருத்து அர்த்தமற்றது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். லாலு இதுபோன்ற புகாரை கூறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. லாலுவுடன் காங்கிரஸýக்கு நல்லுறவு இருந்துவருகிறது. அவரது கருத்து தேவையில்லாதது என்றும் அவர் தெரிவித்தார்.

பாபர் மசூதி இடிப்பில் உள்ள அனைத்து உண்மைகளையும் லாலு பிரசாத் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கேட்டுக்கொண்டார். மசூதி இடிக்கப்பட்ட பிறகு கதவுகளை பூட்டாமல், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு யார் காரணம். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம்.

பாஜக ஆதரவுடன் முதல்முறையாக முதல்வராக வந்த லாலு, அப்போது தனக்கு வசதியாக இந்த தகவல்களை மறைத்துவிட்டார். அதற்கு பிறகு காங்கிரஸ் அரசு அவரை பலமுறை காப்பாற்றி வந்தது. அதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது என்றார்.

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மீது லாலு பிரசாத் யாதவ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான அகமது கூறுகையில்,'லாலு பிரசாத் கூறியுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர் இதுபோல் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முதலில் வருத்தம் தெரிவித்தவர் சோனியா தான்' என்றார்.

Sunday, April 19, 2009

தினம் ஒரு தேர்தல்-3



இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார்.
இனி செய்வதற்கு
எதுவுமில்லை

-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.
சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின்
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசியது



இது குறித்த வாக்குப்பதிவு இடப்புறமுள்ள பெட்டியில்

மூட் மீட்டர்-1

Mood Meter
கட்சிகளுக்குள் நிலவும் மனநிலை குறித்து ஊடகங்கள் தரும் தகவல்

திமுக:

சென்னை, ஏப். 18: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக -காங்கிரஸ் இடையே ஒற்றுமை இல்லாதது பற்றி முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார். 2004-ல் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் வென்ற திமுக தலைமையிலான கூட்டணியில் இப்போது காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் மட்டுமே மிஞ்சியுள்ளன. இதில் புதிதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேர்ந்துள்ளது. இடதுசாரிகள் விலகிச் சென்றபோதும், கூட்டணியில் இருந்து நீக்கப்பட்ட பா.ம.க.வை மீண்டும் சேர்க்கத் தயங்கியபோதும் அதிகம் கவலைப்படாத கருணாநிதி, காங்கிரஸ் கட்சியை மட்டும் தங்களுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறார். சொல்லப் போனால், காங்கிரஸ் ஆதரவு இருந்தால்தான் திமுக ஆட்சியே நீடிக்கும் என்ற நிலைமை. ஆனால், கட்சியில் இரண்டாம் நிலையில் உள்ளவர்களிடையே காங்கிரஸ் கட்சியை அரவணைத்துச் செல்லும் போக்கு இல்லாததால் காங்கிரஸ் கட்சியினரிடம் அதிருப்தி உருவாகியுள்ளது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு செயல்வீரர்கள் கூட்டங்கள் பல இடங்களில் நடக்கின்றன. தென் சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாள்களாக நடந்த செயல்வீரர்கள் கூட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் அழைக்கவே இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் சனிக்கிழமை மாலை நடந்தது. இக் கூட்டத்துக்கான மேடையில் முதலில் "உதயசூரியன்' சின்னம் மட்டுமே பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் "கை' சின்னம் வைக்கப்படவில்லை. காலையில் மேடையைப் பார்வையிட்ட கட்சிப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. கை சின்னம் இல்லையே என சிலர் சுட்டிக் காட்டியபோதும் கூட, அது தேவையில்லை என்று கூட்டத்தை ஏற்பாடு செய்த வடசென்னை மாவட்ட திமுகவினர் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த கருணாநிதி, மேடையில் கை சின்னத்தையும் வைக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். அவர் கூறியும் சின்னம் வைக்காததால், அவ்வாறு வைக்காவிட்டால் கூட்டத்துக்கே வரப் போவதில்லை என்று எச்சரித்திருக்கிறார். அதன் பிறகுதான் மேடையில், பெயரளவில் கை சின்னம் வைக்கப்பட்டது. இதைக் கருணாநிதியே தனது உரையில் கூறியுள்ளார்.

7,500 இருக்கைகளுக்கு ஆர்டர் தந்தபோதிலும் 4,500 இருக்கைகள் மட்டுமே அங்கு போடப்பட்டன. அந்த அளவுக்கு கூட்டம் குறைவாக இருந்தது என கட்சியினரே கூறுகின்றனர். வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்துக்கு வழக்கமாக வரும் அளவைவிட இது குறைவான கூட்டம்தான் என காவல் துறையினர் குறிப்பிட்டனர். திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரியும்கூட இதுபற்றி வருத்தம் தெரிவித்தாராம். அதிமுகவினர் மிகப் பெரிய அளவில் கூட்டத்தை வரவழைத்த நிலையில், சில ஆயிரம் பேரை மட்டும் வைத்தா வேட்பாளர்களை அறிமுகம் செய்வது என அவர் கடிந்து கொண்டாராம். இதே கூட்டம் மதுரையில் நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமா என்றும் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே தமிழகத்தில் தங்கள் ஆதரவை நம்பி நடந்து கொண்டிருக்கும் ஆட்சியில் தங்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்ற ஆதங்கம் காங்கிரஸ் கட்சியினரிடம் உள்ளது. இப்போது தேர்தல் பிரசாரத்திலும் இது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை முக்கியமாகக் கருதித்தான் தாங்கள் அமைதியாக இருந்ததாகவும், அதனால் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டியதாயிற்று எனவும் கருதும் திமுகவினர் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சியினரை அழைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அழைக்காமல் தாங்கள் ஏன் போக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் விலகி நிற்கின்றனர்.

ஆனால் எதிர்தரப்பில் அதிமுக அணியில் பல்வேறு விஷயங்களில் கொள்கை அடிப்படையில் மாறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் பிரசாரம் என்பதில் எல்லோரும் ஓரணியாகச் செயல்படத் தொடங்கிவிட்டனர். தீவுத்திடலில் நடந்த அதிமுக அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் இரட்டை இலை சின்னத்துக்கு சமமான அந்தஸ்து கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் தரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி அதிருப்தியாளர்களை உரிய முறையில் சந்தித்துப் பேசி, பிரசாரத்தில் ஈடுபட வைத்து வருகின்றனர். பிரசாரத்தில் அதிமுக அணி முந்திச் செல்லும் நிலையில், திமுக அணியில் இன்னும் ஒற்றுமையே கேள்விக்குறியாக இருப்பது இந்த அணியின் கட்சியினரிடம் சிறிது அச்சத்தை உருவாக்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி ஏப்ரல் 19 2009

தேதிமுக

தி.மு.க -அ.தி.மு.க.,விற்கு மாற்றாக கருதப்படும் தே.மு.தி.க., வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.கடந்த சட்டசபை தேர்தலை போலவே தே.மு.தி.க., வேட்பாளர்கள் தி.மு.க -அ.தி.மு.க., ஓட்டுக்களை பெரிதும் பிரித்து வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே கண்ணோட்டத்தில் மற்ற கட்சிகள் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் அதிக ஓட்டுக்களை பெறுவதற்கான காய் நகர்த்தலில் தே.மு.தி.க., தலைமை இறங்கியுள்ளது. அதற்கான வியூகங்களையும் தே.மு.தி.க., தலைமை ரகசியமாக வகுத்து அதை செயல்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒவ் வொரு தொகுதிக்கும் மாநில நிர்வாகி ஒருவருடைய தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், வெற்றி வாய்ப்புள்ளவையாக தே.மு.தி.க., தலைமை நம்பியுள்ள எட்டு தொகுதிகளுக்கு மூன்று மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.மேலும் மாவட்ட செயலர்களுக்கும் தே.மு.தி.க., தலைமை புதுப்புது உத்தரவுகளை நாள்தோறும் வழங்கி வருகிறது.

அதன் படி அவர்களிடம் விஜயகாந்த் குரல் பதிவு செய்யப்பட்ட டெலிபோன் ரெக்கார்டட் மெசேஜ், போஸ்டர், பிட் நோட்டீஸ், 'டிவி', நாளிதழ் மற்றும் எப்.எம்., விளம்பரம் செய்யும் ஏற்பாடுகளை உடனடியாக கவனிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள வாக்காளர்களில் இரண்டு லட்சம் பேருக்கு லேண்ட் லைன் போன் அல்லது மொபைல்போன் மூலம் இந்த ரெக்கார்டட் மெசேஜ் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கால் ஒன்றிற்கு கட்டணமாக 70 காசுகள் என கணக்கிட்டு கட்சி தலைமை பரிந்துரைத்துள்ள தனியார் நிறுவனத்திடம் மாவட்ட செயலர்கள் பணம் செலுத்த வேண்டும்.

இதே போல டிஜிடல் பேனர், போஸ்டர், பிட் நோட்டீஸ், பிளாஸ்டிக் தொப்பி, முரசு சின்னம் அச்சிடப்பட்ட பனியன் ஆகியனவற்றை கட்சி தலைமை பரிந்துரை செய்துள்ள ஏஜன்சியிடம் பணம் கொடுத்து அவர்கள் வாங்கி பூத் ஏஜன்டுகளிடம் வினியோகிக்க வேண்டும்.

விஜயகாந்த் வேட்பாளர் நேர்காணல் நடத்தியபோது ஆர்வகோளாறில் சிலர் 'சீட்' கிடைத்தால் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக கூறினர். அதை நம்பி கட்சி தலைமையும் பரிசீலனை செய்யாமல் அவசர கதியில் அவர்களுக்கு சீட் வழங்கியது. ஆனால் 'சீட்' கிடைத்த பிறகு சொந்த பணத்தை செலவு செய்யாமல் வேட் பாளர்கள் சிலர் கட்சி தலைமையில் இருந்து பணம் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் சில தொகுதிகளில் தே.மு.தி.க.,வினர் தேர்தல் பணியை இன்னும் முழுவீச்சில் துவங்கவில்லை. தனி தொகுதிகளில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது.

தேர்தல் செலவுகளை கவனிக்க வேண்டிய நிர்பந்தம் மாவட்ட செயலர் களின் தலையில் விழுந்துள்ளது. போதாக் குறைக்கு கட்சியின் நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் தேர்தல் செலவுக்கு பணம் கேட்டு நச்சரிப்பதால் மாவட்ட செயலர்கள் நெருக்கடிக்கு ஆளாகி செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

ஏற்கனவே கட்சி மாநாடுகள், நல திட்ட உதவிகள் வழங்க பல லட்சம் ரூபாய்களை மாவட்ட செயலர்கள் செலவு செய்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பதுங்கலால் மீண்டும் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அக்கட்சி மாவட்ட செயலர்கள் பலரது மொபைல் போன்கள் 'சுவிட்ச் ஆப்' ஆகலாம் என தெரிகிறது

தினமலர் ஏப்ரல் 19 2009

அதிமுக

சென்னை தீவுத்திடலில் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய அதே பேச்சைத்தான் ஜெயலலிதா இரண்டு ஊர்களிலும் பேசினார். சாவி கொடுத்த பொம்மை, குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கருணாநிதியை கிண்டல் செய்து தொண்டர்களை உசுப்பேற்றினார். குமரி மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கொண்டு வருவேன், மீனவர்களுக்காக கூடுதல் தூண்டில் வளைவு அமைப்பேன், மூடும் நிலையில் உள்ள ரப்பர் கழகத்தை சரி செய்து திறம்பட செயல்படுத்துவேன் என்ற உள்ளூர் பிரச்னைகள் மட்டும் அவரது பேச்சில் புதிதாக இடம் பெற்றிருந்தன.

  • ஜெ., வருவதற்கு சில நிமிடங்கள் முன் ஓடோடி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மேடை படிக்கட்டில் ஏறி நின்று கூட்டத்தை பார்த்து விட்டு திருப்தியுடன் தலை அசைத்தார்.
  • கடுமையான வெயிலிலும் நாகராஜா கோவில் மைதானம் நிரம்பி வழிந்தது.
  • ஜெ., வருவதற்கு முன் வழக்கமாக ஓடிவரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நாகர்கோவிலில் காணமுடியவில்லை.
  • பச்சை சேலை அணிந்து கும்ப மரியாதையுடன் நின்ற பெண்களைப் பார்த்து சிரித்த ஜெ., அவர்களை பக்கத்தில் அழைக்கவில்லை.
  • எனக்கு குடும்பம் கிடையாது என்று ஜெ., கூறிய போது, அம்மா நாங்கள் இருக்கிறாம் என்று தொண்டர்கள் குரல் எழுப்பினர்.

தினமலர் தேர்தல் இணைய தளம் ஏப்ரல் 19 2009

Saturday, April 18, 2009

தினம் ஒரு தேர்தல் -2




வாக்களிக்கும் பெட்டி இடப்புறம் உள்ளது

Friday, April 17, 2009

தினம் ஒரு தேர்தல் -1

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். சிலர் மேடையேறி விட்டனர். சிலரது மேடைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.இனி நம் வேலை வாக்களிப்பதுதான்.

இனி இந்தத் தளத்தில் தினம் ஒரு தேர்தல்

இன்றையக் கேள்வி:

அடுத்த பிரதமரைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் என ஜெயலலிதா முழங்கியிருக்கிறார். காங்க்ரசும் பாஜகவும் தாங்கள் தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை என்பதை ஏறக்குறைய அறிவித்து விட்டார்கள்.நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நேரங்களில் அரசின் பெரும்பானமையைத் தீர்மானிப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றியிருக்கிறது

ஆனால் தமிழ்நாட்டின் தீர்ப்பு சிதறிச் சிந்துவதாக (Fragmented) இல்லாமல் இருக்கும் போதே அத்தகைய வாய்ப்பைப் பெறுவது சாத்தியம். தமிழ்கம் அப்படிப்பட்ட தீர்ப்பை அளிக்குமா என்பதே இன்றுள்ள கேள்வி.

Sunday, March 29, 2009

பாமகவின் முன் உள்ள சவால்

பலர் நினப்பது போல் இல்லாமல் சவால் நிறைந்த தொகுதிகளே பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள். ஸ்ரீபெரும்புதூர் மறுசீரமைப்பிற்குப் பின் உருமாற்றம் பெற்று சென்னையின் புறநகர் தொகுதியாக மாற்றம் கண்டிருக்கிறது.சிதம்பரமும் பாதிக்குப் பாதி என்ற அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம் அதிக சிரமம் இராது. ஒரு Quick look

ஸ்ரீபெரும்புதூர்:
முன்பு இது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரின் அருகமைந்த 'கொல்லைப்புற' (Backyard) நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கியது.
இன்று இது மதுரவாயல், அம்பத்தூர், .ஆலந்தூர்,.ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம். ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இதில் மதுரவாயில்,அம்பத்தூர், பல்லாவரம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியும் சில பகுதிகளை வேளச்சேரி தொகுதியிடம் இழந்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பைக் கணிக்க பழைய கணக்குகள் உதவாது. ஆனால் சில நுண் ஆய்வுகள் (Micro analysis) மூலம் சில ஊகங்களை மேற்கொள்ளலாம்.

2006 சட்டமன்றத் தேர்தலின்போது வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கியிருந்த அம்பத்தூர், மதுரவாயில் பகுதிகளில் திமுக கணிசமான வாக்குகள் பெற்றது என திமுகவினர் சொல்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் ஆலந்தூர் தொகுதிக்குள் இருந்தது.ஆலந்தூரில் 2001ல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
ஆர்.எம்.வீரப்பனை வீழ்த்திய அதிமுக 2006ல் சுமார் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.(அதாவது இங்கு கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன) (மாற்றத்திற்குட்படாத) தாம்பரத்தில்.
2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வென்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 2001ல் அதிமுக அணியின் ஆதரவிலும், 2006ல் திமுக அணியின் ஆதரவிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வெற்றி பெற்றார் (அதாவது இங்கும் கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத்
தீர்மானிக்கின்றன)

சுருக்கமாகச் சொன்னால் இது திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். ஆனால் இதன் சில பகுதிகளில் கூட்டணி மாஜிக் வேலை செய்யும்.

ஆலந்தூர், தாம்பரம் ஆகியவை தென் சென்னைத் தொகுதியில் இருந்ததால், தென் சென்னை எம்.பி.யான டி.ஆர்.பாலு அந்தப் பகுதிகளில் தன்வசமிருந்த அமைச்சகத்தின் மூலம் நிறைய வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார். ஆனால் வில்லிவாக்கம் வட சென்ன்னையில் இருந்ததால் அவர் அந்தப் பகுதிகளில் இதே அளவு கவனம் செலுத்தினார் எனச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் திமுக சார்பில் களமிறங்கினால் போட்டி கடினமாக இருக்கக் கூடும்.

இது நகர் சார்ந்த தொகுதியாக இருப்பதால், ஜாதி செல்வாக்கு பெருமளவில் வேலை செய்யாது. பணம் வேலை செய்யலாம். ஆனாலும் நடுத்தர வர்கத்தின், குறிப்பாக தொழிலாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை

சிதம்பரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் இன்று, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகளும், கடலூர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மங்களூர் தொகுதி சில மாற்றங்களுடன் திட்டக்குடி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே சிதம்பரம் தொகுதியில் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான் (சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி) இருக்கின்றன. அவற்றோடு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்து இப்போதும் நீடிக்கிற மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இப்போது (சிதம்பரம், புவனகிரி) அதிமுக வசம் இருக்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகளின் துணையில்லாமல் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் இவை என்பதால் அதற்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்போது பாமகவும் அதனுடன் இணைந்து கொள்வதால் அந்த அணியின் வலு அதிகரித்திருக்கிறது. இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியவை புதிதாக உருவான தொகுதிகள்.

1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாமக தொடர்ந்து வெற்ற் பெற்று வந்திருக்கிறது. மூன்று முறையும் 3லட்சம் -3.5லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது (பதிவான வாக்குகளில் 45-47%) இங்கு இரண்டு முறை
திருமாவளவன் போட்டியிட்டு இரு முறையும் தோல்வி கண்டிருக்கிறார். 1999ல் சுமார் 1.25 லட்சம் வாக்குகளில் தோற்றார். 2004ல் 87 ஆயிரம் வாக்குகளில் தோற்றார்.1999ல் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது.

இந்த முறையும் போட்டி திருமாவிற்கும் பாமகவிற்குமிடையேதான் இருக்கும். தோற்றத்தில் மாற்றம் கண்டுள்ள தொகுதி எப்படித் தீர்ப்பளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்


அரக்கோணம்

அரக்கோணமும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கணிக்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள்தான். திருத்தணி காட்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.இதில் திருத்தணி அதிமுக வசம் உள்ளது.

காட்பாடி துரைமுருகனின் சட்டமன்றத் தொகுதி.. கெளரவப் பிரசினையாக எடுத்துக் கொண்டு பாமகவிற்கு எதிரான போட்டியைத் தீவீரப்படுத்தலாம்

ரயில்வே துணை அமைச்சர் வேலு கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருவேளை திமுக இந்த முறை ஜகத்ரட்சகனைக் களமிறக்கக் கூடும்

மற்ற 3 தொகுதிகள் நாளை....

Thursday, March 26, 2009

பாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

எதிர்பார்த்தபடியே, பாமக அணிமாறி விட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க அது மேற்கொண்ட அணுகு முறை நயமாக இருந்தது. 1952ல் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியது போல, பாமக தனது பொதுக் குழுவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.கை தூக்குவது அல்லது கரவொலி எழுப்புவது என்ற முறையின் மூலம் அல்லாது வாக்குச் சீட்டி வழியே தங்கள் கருத்தைத் தெரிவிக்க செய்து முடிவு செய்திருக்கிறது.

இந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்
கட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.

டாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திமுக கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.

இரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே? யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.

பாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி
கண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.

அதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்


1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்
பெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை

இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து
உடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.

வன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)

தமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்
அங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு
விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்
தொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.

பாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.

சரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்?

1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.

2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)

ஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.

பாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.

தொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்