Tuesday, February 10, 2009

இலங்கையை மறப்பார்களா மக்கள்?.

தவநெறிச்செல்வன்

இந்தியப் பொதுத்தேர்தல் தொடங்கப்போகிறது, கட்சிகள் தங்கள் தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் காட்சிகள் நிறைய மாறிக் கிடக்கின்றன அதற்கான முக்கிய காரணம் இலங்கை பிரச்சினைதான். கலைஞர் கருணாநிதியின் இலங்கை பற்றிய நிலைபாடுகள் ஒரு மிக மோசமான அதிருப்தியை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தனது கூட்டணியில் சில கட்சிகளை இழக்க நேரிடலாம், இந்த இலங்கை பற்றிய பொறி அடங்காத சூழல் தேர்தல் வரை இருக்குமானால் நிச்சயம் அது காங்கிரஸுக்கு பாதகமாக முடியக்கூடும்,
முத்துகுமார் அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது இளைஞர்கள் மத்தியில் திமுகவின் மீதான எதிர் வினையாகக் கொள்ளலாம், அது தேர்தல் வரை நிலைகொண்டிருந்தால் அது மிகப்பெரிய வீழ்ச்சியாக நிச்சயம் மாறும்.
ஆனால் இந்த வீழ்ச்சியை யார் உபயோகப்படுத்தப்போகிறார்கள் என்பது மிகவும் குழப்பமாக இருப்பதுதான் திமுக வின் அதிர்ஷ்டம் விடுதலைப்புலிகளுக்கான எதிர் நிலையை அதிமுக எடுத்திருப்பதால் அது இந்த வாய்ப்பைப் பயன் படுத்த முடியாமல் போககூடும். அதே நேரம் புலி ஆதரவு நிலையில் இருக்கிற மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், கம்னிஸ்டுகள் ஓரணியில் திமுகவை விட்டும் அதிமுகவை விட்டும் தனியாக வந்து கூட்டனி அமைப்பார்களா என்பது சாத்தியமில்லாததாகவே எனக்குப் படுகிறது, முக்கியமாக கம்னியூஸ்டுகள் அதிமுகவை விட்டு வருகிற வாய்ப்பு மிகக் குறைவாகவே தோன்றுகிறது, பாமக வின் நிலை இன்னும் தெளிவில்லை அவர் ஜெயிக்கும் கூட்டணியில்தான் இருப்பார் என்பதால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இருக்கும் மக்கள் சூழலைப்பொருத்தே அவரின் முடிவு இருக்கும், எனது எண்ணம் இலங்கை பிரச்சினை தேர்தலுக்கு முன் மறக்கடிக்கப்பட்டால் அவர் திமுகவுடன் இணைவார் என்பதுதான்,
ஆக இந்தத் தேர்தல் இலங்கை பிரச்சினை மக்கள் மனதில் எந்த அளவு நினைவில் இருக்கிறதோ அதைப்பொறுத்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது ஆழமான எண்ணம்,
ஆனால் சமீபத்திய திருமங்கலம் தேர்தல் இலங்கை பிரச்சினையை சுத்தமாக மறந்த நிலையில் நடந்ததையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும், தேர்தல் நேரத்தில் இலங்கை பிரச்சினை சுத்தமாக மறக்கடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியவில்லை, ஆனால் மின் தட்டுப்பாடு பிரச்சினை இப்போது ஓரளவுக்கு மறந்து போய்விட்டது, இப்படி ஒரு பிரச்சினையை கொண்டு மற்ற பிரச்சினைகள் மறந்து போவது நடந்தாலும் இரண்டுமே திமுக வுக்கு எதிராக நடக்கிறது என்பதுதான் கவனிக்கவேண்டியது.
காங்கிரஸுடன் உள்ள கூட்டணி திமுகவுக்கு இந்த தேர்தலில் சுமையாக முடியக்கூடிய நிலையிலும் முதல்வர் தனது முடிவுகளை குழப்பமாக வைத்திருப்பது தற்போதைய சட்டசபை பலத்தில் உள்ள குறையால்தான், ஆனால் இந்த குழப்பம் நிச்சயம் பெரிய மாற்றத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்தப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்குள் வரக்கூடும் என்பது போல் செய்திகள் வருகின்றன, உண்மையில் இந்த இலங்கை பிரச்சினை அதிகம் பாதிக்க போவது விஜயகாந்தின் வளர்ச்சியைதான் என்று தோன்றுகிறது, கட்சி தொடங்கி மிக குறுகியகாலத்தில் வளர்ந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்திட வாய்ப்பு ஏற்ப்பட்டு அதும் வெற்றி வாய்ப்பு கூடுதல் இருந்த ஒரு கூட்டணியாக அது இருந்து திடீரென இந்த இலங்கைப்பிரச்சினையால் அந்த கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவர் இந்த கூட்டணிக்குள் செல்வது ஒரு பெரிய தர்மசங்கடம்தான் என்று தோன்றுகிறது.
இன்றைய நிலையில் தேர்தலோடு இலங்கை பிரச்சினை முடிச்சுப் போடப்படவில்லை என்றே தோன்றுகிறது, கடைசி கூட்டணி காட்சிகளைப்பொருத்து இலங்கை பிரச்சினை ஒரு நல்ல காரணியாக மாறும் என்று தோன்றுகிறது, ஆனால் இதெல்லாம் புரியாத ஆள் இல்லை முதல்வர், அதற்கு முன் செய்ய வேண்டியதை செய்து தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் ஆனால் காலம்தான் குறைவாக இருக்கிறது.
திமுகவுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய கொண்டவராக ஜெயலலிதா தோன்றுகிறார், மின் தட்டுபாடு இலங்கை பிரச்சினை இன்னும் ஆட்சியின் பல்வேறு குறைகளை அவர் பயன் படுத்திக்கொள்ளவே இல்லை, அதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றும் சக்தியும் கூட்டமும் அவருக்கு இருந்தும் அதை அவர் செய்யவில்லை, ஏதோ சின்ன சின்னப் போராட்டங்களை ஊர் ஊருக்கு நடத்தி அதுபோதும் என்று இருக்கிறார் என்பதால் அவரிடம் கூட்டணி தேடி ஓடும் ஒரு கட்டாயத்தை அவர் மற்ற கட்சிகளுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்டார், கம்னியூஸ்ட் கூட, ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்புகள் பிரமாதமாக இருப்பதால் அங்கு செல்லவில்லை, காங்கிரஸ் இல்லாத கூட்டணி அவ்வளவே, பாமக இன்னும் பெரிய அளவில் அதிமுக வுடன் பேசாததும் அதனால்தான். பாஜக மட்டும்தான் அதிமுக வின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்கள் அது தமிழகத்தை பொறூத்தவரை பாஜக வின் பலவினமான நிலைமை,
எனவே இலங்கை பிரச்சினை இந்த தேர்தலில் பெரும் பங்குவகிக்கப்போவது மக்களின் மறதி நிலையைப்பொருத்துதான் என்று தோன்றுகிறது. எல்லா தேர்தலும் போலவே மக்களின் மறதி ஒரு முக்கிய காரணி பிரச்சினைதான் வேறு வேறு.

2 comments:

Unknown said...

காலம் தேர்தலை தோற்கடிக்கும் !!!!!!

satheshpandian said...

we should send congress to home.