Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Thursday, March 05, 2009

India Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல்

சமீபத்தில் கவனத்தை ஈர்த்த பதிவுகள்:

முதற்கண் மேற்கோள்

நான் வாக்களிக்கறவன்(ள்) ஜெயிக்கணும்னு நினைக்கறது வேற. ஜெயிக்கறவனுக்கு என் வாக்கு போகணும்னு நினைக்கறது வேற. - பத்ரி

~oOo~

உண்மைத்தமிழன் கிசுகிசுக்களையும் கூட்டணி கணக்குகளையும் ஹேஷ்யங்களையும் கொடுக்கிறார்: தேர்தல் ஸ்பெஷல்: இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

ஒரு வதந்தி:

குலாம்நபி ஆசாத் இன்னொரு திருப்பமாக விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைத்துள்ளார். விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்தேறியதாக டெல்லி வட்டாரத் தகவல். 7 தொகுதி கேட்டு 5 உறுதியாகியுள்ளதாம். கூடவே ஒரு தொகுதிக்கு '2 சி' என்று தேர்தல் நிதியும் தரப்படுமாம்.

ஒரு நிதர்சனம்:

பா.ம.க.வின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்தான். இந்த முறை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என்று தனித்து நிற்க வேண்டி வரலாம் என்கிறார்கள்.

~oOo~

அமெரிக்காவிற்கு மட்டும்தான் மாற்றம் என்னும் தாரக மந்திரம் வேலை செய்ய வேண்டுமா?

தமிழகத்திற்கு மாற்றம் கோரும் பதிவு பார்த்தேன்.

அமெரிக்காவில் டெமொக்ரட்சும் ரிபப்ளிகன்சும் அல்லாத க்ரீன் கட்சி (பசுமைத் தாயகம்?) போல் நிறைய மாற்று சித்தாந்தத்தை வலியுறுத்தும் முன்னணிகள் இருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு அவசியமா? மாற்றம் சாத்தியமா?
கருணாநிதியாகட்டும், காங்கிரஸாகட்டும், அதிமுகவாகட்டும் - ஈழப்பிரச்சினை பற்றியெறியும் போதும் , நமது தொப்புள் கொடி உறவுகள் குண்டடி பட்டுச் சாகின்ற போதும் கவலையொன்றுமின்றி கூட்டணிக் கணக்குகளை போடுகிறார்கள்.

இன்னமும் தமிழுணர்வு கொண்ட கட்சிகளாக நாம் நம்பும் மதிமுக , பாமக , வி.சிறுத்தைகள் ஆகட்டும் , தேர்தல் என்று வந்தவுடன் சீட்டுக்களுக்காக தாம் போட்ட கோசத்தை மறந்து எத்தனை சீட்டு என்று பேரம் பேச ஆரம்பித்துவிட்டன. விஜயகாந்த் பற்றியோ , சரத்குமார் பற்றியோ பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.

குழலி, மதிபாலா, தமிழ் சசி, கார்த்திக்ராமஸ் மற்றும் மாற்றம்நம்பி ஆகியோர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணிக்கான தேவையையும், எவ்வாறு அதை அமைப்பது என்பன குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

~oOo~

ஆந்திராவில் 'மாற்றம் கொண்டுவருகிறேன்' என்று தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவிற்கும் காங்கிரஸ் ராஜசேகர ரெட்டிக்கும் மாற்றாக களத்தில் குதித்த சிரஞ்சீவிக்கு பொதுவான கட்சி சின்னம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் மூன்றாம் அணியாக வரமாட்டார் என்று சந்தேகிக்கப்படும் ரஜினியின் நிலை என்னவென்று ஆர். முத்துக்குமார் சொல்கிறார்: இந்தியா 360 டிகிரி

தேர்தல் பிரசாரத்தில் ரஜினி!
கலைஞர்: இப்போ கேப்டனு, பைலட்டு, டிரைவருன்னு ஏகப்பட்ட பொடிப்பசங்க வந்து பாலிடிக்ஸ் பண்றானுங்க!

ஜெயலலிதா: யெஸ்.. நீங்க பிரசாரம் பண்ண்ணும்.. பட்.. எனக்கு இல்ல.. கருணாநிதி கூட்டணிக்கு.. (என்று ஜெ சற்று நிறுத்த, ரஜினி ஆச்சர்யமாகப் பார்க்கிறார்)

~oOo~

ஜெயலலிதா, ரஜினி என்றால் குட்டிக் கதை வேண்டுமே. அக்னி பார்வை சொல்கிறார்: தேர்தல் 2009

லோக் சபாவா? லொள்ளு சபாவா

ஒருவர் தன் வீட்டில் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதை வீட்டின் வேலைகளை செய்ய பழக வைத்தார். குரங்கு எந்த வேலையை நன்றாக செய்தாலும் சரி பிரம்பால் ஒரு அடி விழும்.

ஒரு நாள் தன் நண்பரை, தன் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தார். நண்பர் வந்ததும்,
குரங்கிடம் நாற்காலி போட சொன்னார்; ஒழுங்காக போட்டது ஒரு பிரம்படி.

தண்ணீர் கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்தது; ஒரு பிரம்படி.

விசிறி கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்த்து; ஒரு பிரம்படி.

நண்பருக்கு சற்று கோபம் வந்தது. 'அது தான் ஒழுங்காக வேலை செய்கிறதே, பின்பு ஏன் பிரம்பால் அடிக்கிறாய்? விடு! அது ஒழுங்காக நடந்துக்கொள்ளும். அடிக்காதே' என்றார். அவரும் ஒப்புக்கொண்டார்.

பின்பு மதிய நேரம் குரங்கை இலை போட சொன்னார். இலை போட்டது ஆனால் அடி விழவில்லை.அது இலையை மெதுவாக பிராண்டியது. அடி விழவில்லை. சாம்பார் சட்டிக்குள் கை விட்டு சிரித்தது, அடி விழவில்லை. மோரை எட்டி உதைத்து அடி விழவில்லை. பொறுத்து பார்த்தவர், அடுத்த அது செய்த வேலைக்கு பிரம்படி கொடுக்க ஆரம்பித்தார், குரங்கு வழிக்கு வந்த்து.

இந்த கதை தான் போது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும். அவர்களை மக்கள் கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால்..

~oOo~

'தேவையா இப்படி ஒரு பட்டன்?' கேட்டதிற்கு பதிலாக எம் எஸ் வி முத்து எழுதுகிறார்: குர‌ல்வ‌லை

தேர்தல் நடத்தி விட்டால் ஜனநாயகமா?

ஓட்டுப் போட்டாலே நம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க.

நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா?

யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா?

மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும்.

~oOo~

அதனால் தேர்தலே வேண்டாமா? 'இந்தியா ஒளிர்கிறது' என்று பத்தாண்டு(தானே?) முன்பு பாஜக சொன்னது போல், 'ஜெய் ஹோ' என்று காங்கிரஸ் பல்லவி பாடுவது போல் பிரதிபா பட்டீல் ஆட்சி, கவர்னர் பர்னாலா அரசு என்று செட்டில் ஆகிவிடலாமா என்னும் கேள்விகள் வெங்கடேஷின் பதிவில் தொக்கி நிற்கின்றன: தேர்தல் நெருங்கிவிட்டது

பொருளாதார சரிவு நிலையில் இச்செலவு தேவையா?

ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

~oOo~

ஏப்ரல் 16-ல் மக்களவை தேர்தல் குறித்து உயிரோசையில் மனோஜ்:

ஜனநாயகமும் பணவிரயமும்

  • வரும் மக்களவைத் தேர்தலில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும்.
  • மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 1300 கோடி செலவிடப்படும்.
  • மத்திய, மாநில அரசுகள் தனியாக ரூ. 700 கோடி செலவு செய்யும். (போட்டோ ஐ.டி. கார்டு, எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷின்கள் போன்றவற்றுக்காக).
  • தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ரூ. 1650 கோடி செலவு செய்யும்.
  • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா மட்டும் ரூ. 1000 கோடி வரை செலவு செய்யும்.
  • வாக்காளர்களுக்கு பணம் வழங்க அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகை ரூ. 2500 கோடியை தொடும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது.


~oOo~

கடைசியாக அருள்வாக்கு

Election prediction of the day: அடுத்த பிரதம மந்திரியாக மாயாவதி பதவியேற்பார். கம்யுனிஸ்ட்கள் அமைச்சரவையில் இடம்பெற்றும் காங்கிரஸ் வெளியில் இருந்தும் ஆதரவு தரும்.

Wednesday, March 04, 2009

Tamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்டணிக்கு செல்கிறதா?

1. BJP launches LS campaign from TN; Advani to speak in Nagerkovil:
தமிழகத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கும் அத்வானி

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன்:

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்களை சேர்க்க தயாராக இருக்கிறோம்.

~oOo~

2. Regional News Headlines in Tamil - Yahoo! Tamil News:
கருணா‌நி‌‌தியுட‌ன் தா.பா‌ண்டிய‌ன் திடீர் ச‌‌ந்‌தி‌ப்பு

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் திடீரென் ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தா‌ர்.

~oOo~

3. TamilNadu News - Dinamani.com:  
தமிழகத்தில் 10 தொகுதிகளைப் பெற கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி

2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • மதுரை, 
  • நாகர்கோவில் தொகுதிகளிலும், 
இந்திய கம்யூனிஸ்ட்
  • கோயம்புத்தூர், 
  • தென்காசி தொகுதிகளிலும் 
போட்டியிட்டு வெற்றி பெற்றன.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்
  • மதுரை, 
  • கன்னியாகுமரி, 
  • திருச்சி, 
  • கோவை, 
  • சிதம்பரம் 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அ.தி.மு.க.விடம் அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
  • நாகப்பட்டினம், 
  • தென்காசி, 
  • திருப்பூர், 
  • கிருஷ்ணகிரி, 
  • விருதுநகர், 
  • வடசென்னை 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அளிப்பது என அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பினாலும், அக்கட்சிகள் 6 இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை தலா 3 தொகுதிகள் வழங்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

~oOo~

4. Chiranjeevi file case against EC:
பொது சின்னம் இல்லை-குழப்பத்தில் சிரஞ்சீவி

சிரஞ்சீவி துவக்கிய பிரஜா ராஜ்யம் முதன் முறையாக நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து தனது கட்சிக்கு பொது சின்னம் வேண்டும் என்றும், அதை ரயில் சின்னமாக தரும்படியும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

பொது சின்னம் கிடைக்காததை அடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலை.

~oOo~

5. TamilNadu News - Dinamani.com:  
சோனியாவை திட்டியதை மறந்துவிட்டார்களா? - கருணாநிதி

"15 தொகுதிகள் வேண்டும்' என்று தமிழக காங்கிரசார் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதிடம் வற்புறுத்திய செய்திக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: Cadres should Work for DMK-Cong win: Karunanidhi, திமுக- காங். கூட்டணி: "உடல் எல்லாம் மூளை, சிந்தனை, வஞ்சனை: கருணாநிதி"

~oOo~

6. Sivagami IAS to contest in Kanyakumari constituency:
கன்னியாகுமரியில் சிவகாமி ஐஏஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி போட்டியிடுகிறார். சிவகாமியின் கணவரின் சொந்த ஊரான கற்காடு கிராமம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியுடன் இருந்தது. இப்போது தொகுதி மறுவரையின்படி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 40,000 தலித் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இந்த தொகுதிக்குள் அடங்கிய
  • நாகர்கோவில், 
  • குளச்சல், 
  • பத்மநாபபுரம், 
  • விளவங்கோடு, 
  • கிள்ளியூர் 
ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தலித் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

Wednesday, February 25, 2009

முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.

திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?

நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி

Saturday, February 21, 2009

அதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி

தில்லியிலிருந்து ரேணு மிட்டல்

அரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.

ஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது

ஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.

குலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறுமாறு கேட்டபோது " இன்று " திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது

கூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்

அதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.

கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.

நன்றி: ரெடீஃப்.காம்

ரெடீஃப் செய்தியைப் பார்க்க:
http://www.rediff.com/news/2009/feb/20tn-cong-wants-an-a

Friday, February 20, 2009

ஜெயலலிதாவின் காங்கிரஸ் கலாட்டா

-நாராயணன்

நேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.

தமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் - திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் - அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

Monday, February 16, 2009

9ல் என்ன ரகசியம்?

வேர் இஸ் தி பார்ட்டி-அதிமுக-2 18/2/09


தமிழகத்தில் அதிமுக முந்துகிறது ?

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்கள்

அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே முக்கியப் பங்கு வகிக்கும்.
2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது

திமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு

விஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள்
காரணமாக இருப்பார்கள்

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது
.


வேர் இஸ் தி பார்ட்டி- அதிமுக-1

9ல் என்ன ரகசியம்

அதிமுக ஏற்கனவே தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து அதன் பட்டியலை தயாரித்து வருகிறது.

40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 9 பேர் கொண்ட குழு, ஒன்றிய அளவில் 9 பேர் கொண்ட குழு, நகர குழு, சட்டமன்ற தொகுதிக்குழு என தலா 9 பேர், இது தவிர வாக்குச்சாவடிக்கு 27 பேர் கொண்ட குழு ஆகியவற்றை அமைத்து, தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கிவிட்டுள்ளார்.

கூட்டணி குறித்தும் அதிமுக தரப்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், எந்தெந்த கட்சியுடன் கூட்டணி, அந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்ற விவரம் உடனடியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது