Friday, May 01, 2009

தினம் ஒரு தேர்தல் -13

ஓரம் போ! தேர்தல் பஸ் வருது!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் கட்டணத்தை திடீர் எனக் குறைத்துள்ளது. அதாவது டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., எம் சர்வீஸ் என எந்த பஸ்ஸில் பயணம் செய்தாலும் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.2 மட்டுமே. இதற்கு முன்னர் முறையே ரூ. 5, ரூ.3, ரூ.2.50 என வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடத்துநர்கள்

இந்தக் கட்டணக் குறைப்பால் ஒவ்வொரு முறையும் டிரிப் கலெக்ஷன் ரு. 1000, ரூ. 800, ரூ. 700 என குறைகிறது. இந்த தொகை பணிமனைக்கு பணிமனை வேறுபடும். தோராயமாக நாள் ஒன்றுக்கு மொத்த வசூலில் சென்னை போக்குவரத்து கழகத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்படும். எங்களுக்கும் இதனால் தினப்படி குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கியை கவர, எங்கள் பையில் கை வைப்பதா? .

மருத்துவர் ராமதாஸ்:

கடந்த மூன்று ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறி சாதாரணக் கட்டணத்தைவிட மூன்று நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தி மக்களை வருத்தி வந்தது திமுக அரசு.

இன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பஸ்களுக்கும் ஒரே வகையான கட்டணம் என்று கட்டணக் குறைப்பைச் சத்தமின்றி செயல்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.

தேர்தலுக்காகக் கட்டணத்தைக் குறைத்திருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு உயர்த்திவிடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியைத் தடுத்து நிறுத்தாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் திமுக அரசைக் தண்டிக்க முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்::

சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் பஸ் கட்டண உயர்வை நியாயப்படுத்தி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து வந்தது திமுக அரசு. ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக புதன்கிழமை இரவிலிருந்து கட்டணத்தைக் குறைத்துள்ளது. திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் காலத்தில் பஸ் கட்டணத்தைக் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கட்டணத்தை உயர்த்திவிட்டதையும் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நரேஷ் குப்தா:

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமீறல் ஆகும். இதுதொடர்பாக ஃபேக்ஸ், தொலைபேசிகளில் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண குறைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை.

நீங்கள்?:
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்

3 comments:

குப்பன்.யாஹூ said...

தேர்தலுக்காக நடக்கும் இன்னொரு நாடகம், ஸ்டண்ட்

ஆனால் என் கவலை பேருந்துகளின் தரமும், இருக்கைகளின் தரமும் குறைந்து விட கூடாது.

கே என் நேரு ஒருவரைத்தான் நான் ஒரு சிறந்த அமைச்சர் என்று இது நாள் வரை கருதி இருந்தேன். அவரும் கொபாலபுரதாரின் வசனப் படி நடிக்க வேண்டி இருக்கிறது.

உண்மையாகவே நேரு செய்த சில சாதனைகள்- பயணிகள் இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் ஏறி இரங்கி சேர வேண்டிய இடத்திற்கு ஒரே பேருந்து விடச் செய்தது.

தியாகராய நகர் - செங்கல்பட்டு

பெரம்பூர்- கூடுவாஞ்சேரி

நங்கநல்லூர் - கானத்தூர்

திருவான்மியூர் - செங்கல்பட்டு

தாம்பரம் - பூந்தமல்லி

அடையார் - விழுப்புரம்

திருவான்மியூர்- திருச்சி

மாதவரம் - மதுரை

திருநெல்வேலி - செங்கல்பட்டு


தேர்தலை கருதியோ அல்லது தேர்தல் முடிந்த பிறகோ இன்னொரு நல்ல திடம் செய்யலாம்

வெளி ஊர்களில் இருந்து ரயிலில் வரும் பயணிகள் அனைவரும் சென்னை வந்ததும் புறநகர் மின் ரயில் செல்ல டிக்கட் எடுக்க வேண்டாம் என்னும் திட்டம்.

திருச்சி, நாகர்கோயில் இருந்து ரயிலில் சென்னை வரும் பயணிகள், தம்பரம் அல்லது எழும்பூர் இறங்கி மீண்டும் சைதாபேட்டை, நுங்கம்பாக்கம், பெரம்பூர் செல்ல மீண்டும் புறநகர் டிக்கட் வாங்க சிரமப் படுகின்றனர்.

குப்பன்_யாஹூ

Anonymous said...

It has become a routine for elected or hotchpotch alliance governments to circumvent the Laws of the land.
When governments themselves flout the laws of land with impunity, what can the citizens do?
Only lament.
A senior citizen

தீபக் வாசுதேவன் said...

வரலாறு காணாத அறிவிலி செயலாக, அரசியல் விளம்பரமாக, குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தால், சென்னை மாநகர பேருந்துக்கு மட்டும் 30% வருவாய் இழப்பு.

இதைப் பற்றிய எனது பதிவு இங்கே