Showing posts with label இலங்கை பிரசினை. Show all posts
Showing posts with label இலங்கை பிரசினை. Show all posts

Saturday, March 21, 2009

பூனைகளான சிறுத்தைகள்

முத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.

"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது." என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான முடிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.

அவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).

அதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.

இலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்?

ஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ? ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ?

தேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.

இரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.

""பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.

இவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சிக்கிறது!

'அடங்க மறு! அத்து மீறு! திமிறி எழு! திருப்பி அடி! என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது

Tuesday, February 10, 2009

இலங்கையை மறப்பார்களா மக்கள்?.

தவநெறிச்செல்வன்

இந்தியப் பொதுத்தேர்தல் தொடங்கப்போகிறது, கட்சிகள் தங்கள் தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் காட்சிகள் நிறைய மாறிக் கிடக்கின்றன அதற்கான முக்கிய காரணம் இலங்கை பிரச்சினைதான். கலைஞர் கருணாநிதியின் இலங்கை பற்றிய நிலைபாடுகள் ஒரு மிக மோசமான அதிருப்தியை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தனது கூட்டணியில் சில கட்சிகளை இழக்க நேரிடலாம், இந்த இலங்கை பற்றிய பொறி அடங்காத சூழல் தேர்தல் வரை இருக்குமானால் நிச்சயம் அது காங்கிரஸுக்கு பாதகமாக முடியக்கூடும்,
முத்துகுமார் அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது இளைஞர்கள் மத்தியில் திமுகவின் மீதான எதிர் வினையாகக் கொள்ளலாம், அது தேர்தல் வரை நிலைகொண்டிருந்தால் அது மிகப்பெரிய வீழ்ச்சியாக நிச்சயம் மாறும்.
ஆனால் இந்த வீழ்ச்சியை யார் உபயோகப்படுத்தப்போகிறார்கள் என்பது மிகவும் குழப்பமாக இருப்பதுதான் திமுக வின் அதிர்ஷ்டம் விடுதலைப்புலிகளுக்கான எதிர் நிலையை அதிமுக எடுத்திருப்பதால் அது இந்த வாய்ப்பைப் பயன் படுத்த முடியாமல் போககூடும். அதே நேரம் புலி ஆதரவு நிலையில் இருக்கிற மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், கம்னிஸ்டுகள் ஓரணியில் திமுகவை விட்டும் அதிமுகவை விட்டும் தனியாக வந்து கூட்டனி அமைப்பார்களா என்பது சாத்தியமில்லாததாகவே எனக்குப் படுகிறது, முக்கியமாக கம்னியூஸ்டுகள் அதிமுகவை விட்டு வருகிற வாய்ப்பு மிகக் குறைவாகவே தோன்றுகிறது, பாமக வின் நிலை இன்னும் தெளிவில்லை அவர் ஜெயிக்கும் கூட்டணியில்தான் இருப்பார் என்பதால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இருக்கும் மக்கள் சூழலைப்பொருத்தே அவரின் முடிவு இருக்கும், எனது எண்ணம் இலங்கை பிரச்சினை தேர்தலுக்கு முன் மறக்கடிக்கப்பட்டால் அவர் திமுகவுடன் இணைவார் என்பதுதான்,
ஆக இந்தத் தேர்தல் இலங்கை பிரச்சினை மக்கள் மனதில் எந்த அளவு நினைவில் இருக்கிறதோ அதைப்பொறுத்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனது ஆழமான எண்ணம்,
ஆனால் சமீபத்திய திருமங்கலம் தேர்தல் இலங்கை பிரச்சினையை சுத்தமாக மறந்த நிலையில் நடந்ததையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும், தேர்தல் நேரத்தில் இலங்கை பிரச்சினை சுத்தமாக மறக்கடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியவில்லை, ஆனால் மின் தட்டுப்பாடு பிரச்சினை இப்போது ஓரளவுக்கு மறந்து போய்விட்டது, இப்படி ஒரு பிரச்சினையை கொண்டு மற்ற பிரச்சினைகள் மறந்து போவது நடந்தாலும் இரண்டுமே திமுக வுக்கு எதிராக நடக்கிறது என்பதுதான் கவனிக்கவேண்டியது.
காங்கிரஸுடன் உள்ள கூட்டணி திமுகவுக்கு இந்த தேர்தலில் சுமையாக முடியக்கூடிய நிலையிலும் முதல்வர் தனது முடிவுகளை குழப்பமாக வைத்திருப்பது தற்போதைய சட்டசபை பலத்தில் உள்ள குறையால்தான், ஆனால் இந்த குழப்பம் நிச்சயம் பெரிய மாற்றத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்தப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணிக்குள் வரக்கூடும் என்பது போல் செய்திகள் வருகின்றன, உண்மையில் இந்த இலங்கை பிரச்சினை அதிகம் பாதிக்க போவது விஜயகாந்தின் வளர்ச்சியைதான் என்று தோன்றுகிறது, கட்சி தொடங்கி மிக குறுகியகாலத்தில் வளர்ந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்திட வாய்ப்பு ஏற்ப்பட்டு அதும் வெற்றி வாய்ப்பு கூடுதல் இருந்த ஒரு கூட்டணியாக அது இருந்து திடீரென இந்த இலங்கைப்பிரச்சினையால் அந்த கூட்டணியின் வெற்றி கேள்விக்குறியாக உள்ள நிலையில் அவர் இந்த கூட்டணிக்குள் செல்வது ஒரு பெரிய தர்மசங்கடம்தான் என்று தோன்றுகிறது.
இன்றைய நிலையில் தேர்தலோடு இலங்கை பிரச்சினை முடிச்சுப் போடப்படவில்லை என்றே தோன்றுகிறது, கடைசி கூட்டணி காட்சிகளைப்பொருத்து இலங்கை பிரச்சினை ஒரு நல்ல காரணியாக மாறும் என்று தோன்றுகிறது, ஆனால் இதெல்லாம் புரியாத ஆள் இல்லை முதல்வர், அதற்கு முன் செய்ய வேண்டியதை செய்து தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் ஆனால் காலம்தான் குறைவாக இருக்கிறது.
திமுகவுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய கொண்டவராக ஜெயலலிதா தோன்றுகிறார், மின் தட்டுபாடு இலங்கை பிரச்சினை இன்னும் ஆட்சியின் பல்வேறு குறைகளை அவர் பயன் படுத்திக்கொள்ளவே இல்லை, அதை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றும் சக்தியும் கூட்டமும் அவருக்கு இருந்தும் அதை அவர் செய்யவில்லை, ஏதோ சின்ன சின்னப் போராட்டங்களை ஊர் ஊருக்கு நடத்தி அதுபோதும் என்று இருக்கிறார் என்பதால் அவரிடம் கூட்டணி தேடி ஓடும் ஒரு கட்டாயத்தை அவர் மற்ற கட்சிகளுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்டார், கம்னியூஸ்ட் கூட, ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்புகள் பிரமாதமாக இருப்பதால் அங்கு செல்லவில்லை, காங்கிரஸ் இல்லாத கூட்டணி அவ்வளவே, பாமக இன்னும் பெரிய அளவில் அதிமுக வுடன் பேசாததும் அதனால்தான். பாஜக மட்டும்தான் அதிமுக வின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்கள் அது தமிழகத்தை பொறூத்தவரை பாஜக வின் பலவினமான நிலைமை,
எனவே இலங்கை பிரச்சினை இந்த தேர்தலில் பெரும் பங்குவகிக்கப்போவது மக்களின் மறதி நிலையைப்பொருத்துதான் என்று தோன்றுகிறது. எல்லா தேர்தலும் போலவே மக்களின் மறதி ஒரு முக்கிய காரணி பிரச்சினைதான் வேறு வேறு.