Saturday, March 07, 2009

தேர்தல் உறவுகள்: SP & NC - PMK & DMDK

ஒரு வழியாக சமாஜ்வாடி கட்சி - காங்கிரஸ் தேர்தல் உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்துவில் வந்திருக்கும் செய்தி சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டது. இதை ஏற்கனவே என்னுடைய பதிவில் யூகித்திருந்தேன். இப்போது சமாஜ்வாடி கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸோடு நெருக்கமாக உறவாடி வருகிறது. சரத் பவாரோ சிவசேனாவோடு பேசியிருக்கிறார். மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை. ஒரு வேளை அது சரிவராத பட்சத்தில், சமாஜ்வாடி கட்சி - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - பாஜக கூட்டணி உருவாக வாய்ப்புண்டு. அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயா அல்லது வெளியிலிருந்து ஆதரவா என்பது இன்னமும் சில நாட்களில் தெரியும்.

இன்னமும்,தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வலிமை உடைய கட்சிகளாக கருதப்படும் இரண்டு கட்சிகள் (பாமக மற்றும் தேமுதிக) கூட்டணியினை அறிவிக்கவில்லை. செய்திகளின்படி பார்த்தால், பாமக பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடே இருக்குமென்று தோன்றுகிறது. அன்புமணி ராமதாஸ் ஐ.மு.கூ நன்றாக ஆண்டது என்று சொன்னதும்,ராமதாஸ் ஜெ.யின் உண்ணாவிரதத்தினை பற்றி பெரியதாக எதுவும் சொல்லததும் காரணங்களாக இருக்கலாம்.

ஒரு நிகழ்ச்சியில், தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும், காங்கிரஸின் மாநிலத்தலைவர் தங்கபாலுவும் சந்தித்து தனியறையில் பேசியது, காங்கிரஸ் தேமுதிகவினை ஐ.மு.கூ விற்கு இழுக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

அடுத்த வாரம் ஒரு முக்கியமான வாரம். பல முக்கிய கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். மார்ச் இரண்டாம் வார இறுதியிலிருந்து எல்லா கட்சியும் புயல்வேக பிரச்சாரத்திற்கு புறப்படுவார்கள்.

No comments: