Saturday, March 07, 2009

மதுரையில் அழகிரி போட்டி?

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலரும், முதல்வர் மகனுமான மு.க. அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

இத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என, திமுகவினர் பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மு.க. அழகிரியின் தலைமையிலான தேர்தல் பணிகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன

திருமங்கலம் இடைத்தேர்தலின்போது அவர் மேற்கொண்ட வியூகங்களும் அதிமுக வேட்பாளரைவிட சுமார் 40 ஆயிரம் வாக்கு கள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ததிலும் மு.க. அழகிரியின் பங்கு பெரிய அளவில் பேசப்பட்டது

தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துத் தந்த மு.க. அழகிரியை கெüரவிக்கும் வகையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பான திமுக தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டது

மேலும், திருச்சி உள்பட தென் மாவட்ட 10 எம்.பி. தொகுதிகளும், 30-க்கும் மேற்பட்ட சட்டபேரவைத் தொகுதிகளும் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என மறைமுகமாக கட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது வரும் மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து மு.க. அழகிரியின் முடிவுக்கே கட்சியின் தலைமை விட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதனால், தென் மாவட்டங்களில் "சீட்' கேட் கும் திமுகவின் முக்கியப் புள்ளிகளும், கூட்டணிக் கட்சியினரும் மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன

இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மு.க. அழகிரியே போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் கருணாநிதிக்குப் பின், அரசியல் பலமும், பதவி பலமும் கட்டாயம் தேவையாக இருக்கும். எனவே, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தது போதும். நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவேண்டும் என்றால் "பதவி' கண்டிப்பாக தேவை என அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது

மு.க. அழகிரி போட்டியிட்டால் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர்.

முதியோர் உதவித் தொகை, திமுகவினரால் இதுவரை 25,000 பேருக்கு மேல் வாங்கித் தரப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மதுரை திமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு செய்துள்ளனர் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 60,000 பேர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோருக்கு தனியார் சிறப்பு மருத்துவ மனைகளில் இலவசமாக மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 67 ஆயிரம் பேருக்கு சுழல்நிதியாக ரூ.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நலத்திட்ட உதவிகளால் பயனடைந்தோரை வாக்குகளாக மாற்றி , அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அழகிரியை வெற்றி பெறச்செய்ய தி மு க வினர் வியூகம் வகுத்துள்ளனர். இதனால் இத்தொகுதியில் அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.
தினமணி 7 மார்ச் 2009

No comments: