Saturday, February 14, 2009

அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?

- நாராயணன்

தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

டெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.

இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.

  • பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு

  • தீவிரவாத அச்சுறுத்தல்

  • பணப்புழக்கம்

  • மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்

  • உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி

  • விவசாயிகளின் பிரச்சனைகள்


இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.

மறுபதிப்பு பதிவு

2 comments:

குப்பன்.யாஹூ said...

பீ ஜெ பி க்கு ஆரம்பத்தில் இருந்த ஆதரவு அலை குறைந்து கொண்டே வருகிறது.

காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கையை (பெட்ரோல் விலை சர்வ தேச அளவில் குறைந்தும், உள்நாட்டில் பிற பொருட்களின் , உணவு பொருட்களின் விலை குறைக்காமல் இருத்தல், பெட்ரோல் விலையும் குறைக்காமல் இருத்தல்) போன்றவற்றை பீ ஜெ பி சரியான முறையில் மக்கள் முன் கொண்டு செல்ல வில்லை.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தையும் மக்கள் முன் சரியாக் கொண்டு சென்று வோட்டுக்களாக மாற்ற தெரிய வில்லை.

தமிழகத்திலும் மின் வெட்டு, இலவசம் என்ற பெயரால் வரிப் பணம் சீரழிவு, தி மு கவில் எல்லா மாவட்டங்களிலும் நிலவும் வாரிசு அரசியல், ஸ்பெக்ட்ரம் ஊழல், டி ஆர் பாலுவின் கிங் சேமிகள் ஊழல் போன்றவற்றை , அதி மு க வும் , வைகோ வும் கூட சரியான முறையில் மக்களிடம் எடுத்து செல்ல வில்லை.

எனவே காங்கிரஸ் தி மு க கூட்டணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது போல தான் தெரிகிறது.

முப்பது தொகுதிகளில் திமுக , காங்கிரஸ் வெல்லும் போல.

பீ ஜெ பிக்கு இது அருமையான மற்றும் இறுதி வாய்ப்பு.

குப்பன்_யாஹூ

Anonymous said...

http://churumuri.wordpress.com/2009/02/15/poll-straws-again-point-to-a-hung-parliament/

(published in today’s Deccan Chronicle): It is going to be another “hung” Parliament in 2009, with the Congress getting 16 seats more than the BJP. The Congress will end up with 150 seats to the BJP’s 134 this time.